Published : 06 Mar 2018 08:54 AM
Last Updated : 06 Mar 2018 08:54 AM

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காவல் நிலையத்தில் எஸ்ஐ - வழக்கறிஞர் மோதல்: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

சாத்தான்குளம் அருகே காவல் நிலையத்தில் வழக்கறிஞர், போலீஸ் உதவி ஆய்வாளர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப் பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சு.பெரியசாமி(47), சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது மனுதாரர் ஒருவரின் நிலப்பிரச்சினை தொடர்பாக, தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யச் சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுந்தரத்திடம், புகார் மனுவுக்கு ஒப்புகைச் சீட்டு தருமாறு வழக்கறிஞர் பெரியசாமி கேட்டுள்ளார். இது தொடர்பாக, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கறிஞர்கள் திரண்டனர்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் சேவியர் சுதாகர் மற்றும் சில வழக்கறிஞர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதேபோல், சாத்தான்குளம் டிஎஸ்பி பாலசந்திரன், நாசரேத் ஆய்வாளர் ரேனியல் ஜேசுபாதம் ஆகியோரும் அங்கு விரைந்தனர். இதனால் காவல் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை தோல்வி

வழக்கறிஞர்களுடன் டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, மோதலில் காயமடைந்ததாக, வழக்கறிஞர் பெரியசாமியும், எஸ்ஐ சுந்தரமும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அளித்த புகாரின் பேரில், தட்டார்மடம் போலீஸார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x