Published : 28 Mar 2018 08:14 AM
Last Updated : 28 Mar 2018 08:14 AM

தனியார் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு: ஆம்பூர் அருகே பரிதாபம்

தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, ஆம்பூர், பேரணாம்பட்டு, வாணியம்பாடி, துத்திப்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை வாரத்துக்கு 2 முறை தொழிலாளர்கள் சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை 3 தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள், நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, கழிவுநீர் தொட்டியில் 3 தொழிலாளர்களும் மயங்கி நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவர்களை மீட்க முயன்றபோது 3 பேரும் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த நபர்கள், கீழ்மிட்டாளம் புதுமனை பகுதியைச் சேர்ந்த செல்வம் (25), பந்தேரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன் (25), ஆம்பூர் அடுத்த அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (41) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பாதுகாப்பு கருவிகள் இல்லை

தோல் பதனிடும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் 3 பேர் உயிரிழந்ததாகவும், இதற்கு தொழிற்சாலை நிர்வாகமே காரணம் என சக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x