Published : 28 Mar 2018 11:58 AM
Last Updated : 28 Mar 2018 11:58 AM

காவிரி விவகாரம்: முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கெடு முடிவதற்குள் மத்திய அரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மத்திய அரசு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. இதனால், மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும், கர்நாடக சட்ட்பேரவை தேர்தலை கருத்தில்கொண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது எனவும், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

“உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடிவடைய இன்னும் ஒருநாள் உள்ளது. அதனால், இப்போது எதையும் சொல்ல முடியாது. அந்தக் கால அளவுக்குள் மத்திய அரசு நிச்சயம் நல்ல முடிவை எடுக்கும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியன தொடர்பாக டெல்டா பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் உணர்வை உணர்ந்து மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்”

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x