Published : 05 Mar 2018 02:25 PM
Last Updated : 05 Mar 2018 02:25 PM

சட்ட விரோத பேனர்கள்; உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு: தமிழக அரசு பதில்

சட்டவிரோதமாக சாலையை மறைத்து வைக்கப்பட்ட பேனர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த வழக்கில் அனைத்து பேனர்களும் அகற்றபட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்வதாகவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, சென்னை அவ்வை சண்முகம் சாலை முதல் டிடிகே சாலை வரையும், சென்னை பல்கழைக்கழகம் முதல் ரிசர்வ் வங்கி வரையும் அனுமதியின்றி சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதை அகற்றக் கோரி காவல் துறைக்கு அளித்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் டிராபிக் ராமசாமி புகைப்படங்களை இணைத்து தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மார்ச் 1-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேனரை அகற்றாமல் காவல் துறையும், சென்னை மாநகராட்சியும் என்ன செய்து கொண்டு இருக்கிறது என கேள்வி எழுப்பியதுடன் உடனடியாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோதமாக சாலையையும், நடைபாதையையும் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றபட்டுள்ளதாகவும், அது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்வதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x