Last Updated : 08 Mar, 2018 07:39 PM

 

Published : 08 Mar 2018 07:39 PM
Last Updated : 08 Mar 2018 07:39 PM

இலங்கை கலவரங்களின் பின்னணி; கொத்து புரோட்டாவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து ஏதும் இல்லை: பகுப்பாய்வில் தகவல்

இலங்கை கலவரங்களின் பின்னணியில் கொத்து புரோட்டாவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து ஏதும் கலக்கப்படவில்லை என அரசு நடத்திய பகுப்பாய்வில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் கொத்து புரோட்டாவில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டிருப்பதாகக் கூறி சிங்கள இளைஞர்களால் அந்த உணவகம் கடந்த பிப்ரவரி 26 அன்று தாக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாறையில் உள்ள பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களால் நடத்தப்படும் சிறு கடைகளையும் தாக்கப்பட்டன.

பின்னர் முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்துகளை கலந்து சிங்கள பௌத்த ஆண்களுக்கு வழங்குவதாக சமூக வலைதளங்களில் இலங்கை முழுவதும் சமூக விரோதிகளால் பரப்பப்பட்டன.

இதனால் கலவரம் கண்டி மாவட்டத்திற்கு பரவி மார்ச் 4 பல பள்ளிவாசல்கள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரத்தில் பௌத்த மதத்தைச் சேர்ந்த முதியவரும், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் இறந்தனர். இதன் காரணமாக மார்ச் 6 செவ்வாய்கிழமை அன்று இலங்கையில் மதக் கலவரங்கள் பரவுவதை தடுக்க இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பத்து நாட்களுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். மேலும் இலங்கையில் மார்ச் 7 புதன்கிழமை சமூக வலைதளங்களான பேஸ்ஃபுக் மற்றும் வாட்ஸ் அப் சேவையும் அரசு முடக்கியது.

புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் நியமனம்

வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வசமிருந்த சட்டம், ஒழுங்குக்கான பொறுப்பை அம்பாறை மற்றும் கண்டியில் நடைபெற்ற இன கலவரங்களைத் தொடர்ந்து இலங்கையின் புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார என்பவரை அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். ரஞ்சித் மத்தமா பண்டார பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிங்கள பௌத்தவர்களின் ஆண்மையை சிதைக்கும் நோக்கில் உணவுப் பொருட்களில் மருந்தினை கலப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் மருந்து கலக்கப்பட்டதாக சொல்லப்பட்ட புரோட்டாவை காவல்துறையினர் ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த சோதனை முடிவுகளை இலங்கை காவல்துறையின் ரசாயன பகுப்பாய்வாளர் ஏ. வெலியங்ககே அறிக்கையாக வியாழக்கிழமை வெளியிட்டார். இந்த அறிக்கையில் புரோட்டாவில் எவ்வித மருந்தும் கலக்கப்படவில்லை. மாவு துகள்கள் கட்டியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை

இலங்கையிலுள்ள இன கலவரங்கள் மீண்டும் வெடித்துள்ளது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இலங்கை நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஒரு அழகான நாட்டில் வேறுபட்ட நம்பிக்கைகளுடன் வாழும் அன்பான மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை விரைவில் தீரும். இலங்கையில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு நான் பிரார்த்திக்கிறேன். வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு ஒன்றாக வாழ்வோம் வாழ விடுவோம்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x