Published : 13 Sep 2014 10:56 AM
Last Updated : 13 Sep 2014 10:56 AM

அஸ்ஸாம் சிறுவனை கோயம்பேட்டில் விற்க முயற்சி: ரூ. 4 லட்சம் விற்பனைக்கு பேரம் பேசியவர் கைது

கோயம்பேட்டில் விற்க முயன்ற அஸ்ஸாம் சிறுவனை போலீஸார் மீட்டனர். அவரை விற்பனை செய்ய பேரம் பேசியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இரவு 17 வயது சிறுவனை ஒரு ஆசாமி விற்க முயன்றார். ஆட்டோ நிறுத்தம் அருகே நின்று கொண்டு அந்த வழியாக வருபவர்களிடம் ரூ.4 லட்சம் கொடுத்து இந்த சிறுவனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த ஆட்டோ டிரைவர்கள் கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சாதாரண உடையில் வந்த காவல் ஆய்வாளர் அரிக்குமார், உதவி ஆய்வாளர் வாசு ஆகியோர் சாதாரண உடையில் அங்கு சென்றனர். அவர்களிடம் அந்த நபர் ரூ.4 லட்சம் தந்து சிறுவனை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். பதிலுக்கு போலீஸார், ரூ.50 ஆயிரம் தருகிறேன் என்றனர். ஆனால் அவர் ரூ.4 லட்சத்துக்கு குறையாது என்று உறுதியாக கூறினார். அதிர்ச்சி அடைந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவரது பெயர் மயினூல் (25) என்பதும் அஸ்ஸாம் மாநிலம் குவஹாட்டி அருகே உள்ள கொக்கதாஜா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இவர் திருச்சியில் ஒரு மர நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதும் தெரிந்தது. அவர் விற்க முயன்ற சிறுவன் பெயர் மாணிக்(17). அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்.

மயினூல் மேலாளராக இருந்ததால் அஸ்ஸாமை சேர்ந்த 4 பேரை மர நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்தார். அதில் சிறுவன் மாணிக்கும் ஒருவர். ஆனால் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்ததால் மாணிக் உள்பட 4 பேரும் வேலையை விட்டுவிட்டு அஸ்ஸாம் திரும்பி விட்டனர். அங்கு சென்று மயினூல் மீது போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் மயினூல் வீட்டுக்கு சென்று அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது தந்தைக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் மயினூல் 4 பேரையும் தொடர்பு கொண்டு சம்பள பாக்கி ரெடியாக இருக்கிறது. வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். இதை நம்பி சிறுவன் மாணிக் மட்டும் ரயில் ஏறி சென்னை வந்தார். அவனை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி, சற்று தூரத்தில் நின்று கொண்டு அந்த சிறுவனுக்கு விலை பேசியிருக்கிறார். மாணிக்குக்கு தமிழ் தெரியாது என்பதால் அதை சாதகமாக்கி பலரிடம் விலை பேசிய போதுதான் போலீஸில் சிக்கி கொண்டார்.

சிறுவனை கடத்தி விற்க முயன்றதாக மயினூல் மீது கோயம்பேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிறுவன் மாணிக் மீட்கப்பட்டு, அஸ்ஸாமில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x