Published : 22 Mar 2018 08:00 AM
Last Updated : 22 Mar 2018 08:00 AM
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழ்நாட்டில் 7 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது.
தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சில் (நாக்) மற்றும் யுஜிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட தர நிறுவனங்கள், சர்வதேச அளவிலான தர நிறுவனங்கள் அளிக்கும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு கல்வித்தரம் ஆய்வு செய்யப்பட்டு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்படுகிறது.
யுஜிசி தன்னாட்சி அந்தஸ்து பெறும் கல்வி நிறுவனங்கள், சுதந்திரமாக செயல்படலாம். புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிக் கொள்வதுடன் அவர்களாகவே தேர்வுகள் நடத்தி, மதிப்பீடு செய்து, தேர்வு முடிவுகளை வெளியிடலாம். புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தலாம். தொலைதூரக் கல்வி பாடத்திட்டத்தையும் செயல்படுத்த முடியும். கல்வி ஆராய்ச்சி தொடர்பாக மற்ற கல்வி நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து பணியாற்றலாம். கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதன் மூலம் பல்வேறு நிலைகளில் சுதந்திரமாக செயல்பட முடியும்.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு நாடு முழுவதும் 52 பல்கலைக்கழகங்களுக்கும் 2 கல்லூரிகளுக்கும் யுஜிசி தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களான போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம், வேலூர் விஐடி பல்கலைகக்கழகம், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கோவை அமிர்தா பல்கலைக்கழகம், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகிய 7 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.
இதன் மூலம் அப்பல்கலைக்கழகங்கள் விரும்பும் இடங்களில் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவ முடியும். மத்திய தொலைதூரக்கல்வி கவுன்சில் அனுமதி பெறாமலேயே தொலைதூரக்கல்வித் திட்டத்தில் படிப்புகளை வழங்கலாம். வெளிநாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த திறமைவாய்ந்த பேராசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திக்கொள்ள முடியும். வெளிநாட்டு மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT