Published : 21 Mar 2018 09:38 AM
Last Updated : 21 Mar 2018 09:38 AM
வங்கி மேலாளர் என கூறி நடிகை வரலட்சுமியின் தாயார் சாயாதேவியிடம் பண மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 3வது மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சாயாதேவி. இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் , “சிட்டி வங்கியின் மேலாளர் எனக் கூறி பிரவீண் குமார் என்பவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். ‘உங்களுக்கு பரிசுத் தொகை விழுந்துள்ளது. அதை நாங்கள் உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கிறோம். அப்படி அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் ஏடிஎம் விவரம் முழுவதையும் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். அதன்படி, அனைத்து விவரங்களையும் தெரிவித்தேன். சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.8,312 மாயமானது.
போலீஸார் விசாரணை
அதன் பிறகுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். என்னை ஏமாற்றி எனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த புகார் மனு தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். சாயாதேவி, நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT