Published : 18 Mar 2018 07:46 AM
Last Updated : 18 Mar 2018 07:46 AM
கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் வழக்கறிஞர் ஒருவர் முறைகேடு செய்துவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 9-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 16 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் தப்பின. விபத்தில் பலியான, காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.
தீயில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான தீக்காயம் அடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், சிறு காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த அறிக்கைப்படி இழப்பீட்டுத் தொகையை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் கணக்கிட்டு தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியது.
இவ்வாறு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் ஒரு பெரும் தொகையை வழக்கறிஞர் தமிழரசன் என்பவர் முறைகேடு செய்துவிட்டதாகக் கூறி கும்பகோணம் ஆசூர் மாரிமுத்து உள்ளிட்ட 49 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் ஏப்ரல் 9-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT