Last Updated : 24 Sep, 2014 04:44 PM

 

Published : 24 Sep 2014 04:44 PM
Last Updated : 24 Sep 2014 04:44 PM

பார்வையாளர் வருகை குறைவு: அடையாளம் இழந்துவரும் விருதுநகர் அருங்காட்சியகம்

விருதுநகரில் பழுதடைந்த வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் அருங்காட்சியகத்துக்கு பார்வையாளர்களின் வருகை மிகவும் குறைந்துவிட்டதால் பொலிவிழந்து வருகிறது.

விருதுநகர் 3-வது ரயில்வே கேட் அருகேயுள்ள இணைப்புச் சாலையில் வாடகை கட்டிடத்தில் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. 1960-களில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு, இக்கட்டிடத்துக்கு அருங்காட்சியகம் மாற்றப்பட்டது.

தற்போது, தரைத்தளம் மற்றும் மேல்தளங்களில் செயல்படும் அருங்காட்சியகத்துக்கு மாத வாடகையாக ரூ. 16 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இக்கட்டிடம் பராமரிக்கப்படாமல் சுவர்கள் மற்றும் மேல்பூச்சு காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களின் புகைப்படங்கள், சோழர்கால மரச்சிற்பங்கள், காட்டுமன்னார் கோயில் குதிரை வீரன் சிற்பம்,

விருதுநகர் மாவட்டத்தில் கிடைத்த பழங்கால நாணயங்கள் மற்றும் அயல்நாட்டு பழங்கால நாணயங்கள், வியாழன் கிரகத்தைப் பற்றிய விளக்கம், புவியின் உள் அமைப்புகள், பல்வேறு வகையான கனிமங்கள், பல்வேறு வகையான கற்கால மற்றும் புதைப் படிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பழங்கால கருவிகள், சுடுமண் பொம்மைகள், பல்வேறு வகையான இசைக் கருவிகள், இந்திய செயற்கைக்கோள்களின் வகைகள், பாடம் செய்துவைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள், சங்கு வகைகள், சிப்பி வகைகள், அஜந்தா சிற்பங்களின் மாதிரி உருவங்கள், இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான கற்கள், பாடம் செய்துவைக்கப்பட்ட பறவைகள், வண்ணத்துப் பூச்சி வகைகள், முதுமக்கள் தாழி, அரியவகை தாவரங்கள் பற்றிய விவரங்கள், பெருங்கற்காலத்தில் பயன்படுத் தப்பட்ட மண்பாண்டங்கள், பீரங்கி குண்டுகள், பழங்கால போர்க் கருவிகள், கவச உடைகள், ஓலைச் சுவடிகள், தோற்பாவைகள், கிராமிய நடன ஆடைகள் உள்ளிட்ட பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதாலும், பஸ் வசதி இல்லாததாலும், அருங்காட்சியகத்தை பார்வையிட வருவோரின் எண்ணிக்கை அருகிப் போனது. வாடகைக் கட்டிடம் என்பதால், பராமரிப்புச் செலவுகளையும் தொல்லியல் துறை குறைத்துக் கொண்டது.

அருங்காசியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாளிடம் கேட்டபோது, குடியிருப்பு பகுதி என்பதாலும், பஸ் வசதி இல்லாததாலும் பார்வை யாளர் வருகை குறைந்துள்ளது. விருதுநகர் பழைய பஸ் நிலையம் மற்றும் மதுரை சாலை பகுதிகளில் இடம் தேடி வருகிறோம். மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய நிதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x