Published : 20 May 2019 04:00 PM
Last Updated : 20 May 2019 04:00 PM
பிரதமர் மோடியை மகிழ்விக்கவே கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இன்று (திங்கள்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து சொல்கிறேன். மோடி இல்லாத அரசுதான் மத்தியில் ஆட்சி அமைக்கும். மோடியால் ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளே இல்லை.
தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளில் எங்கள் கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றிபெறும். 'நியூஸ் எக்ஸ்' பாஜக 242 தொகுதிகளில் வெற்றி பெறும் என சொல்கிறது. 'நியூஸ் 18' பாஜக 336 இடங்களில் வெற்றி பெறும் என்கிறது. இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களின் கணிப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஏறக்குறைய 100 தொகுதிகள். கருத்துக் கணிப்பில் 5 தொகுதிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால், 100 தொகுதிகள் வித்தியாசம் உள்ளதை எப்படி கருத்துக் கணிப்பாக ஏற்க முடியும்?
23-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பேச உள்ளன. அதனை மனதில் வைத்து இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது ஏஜெண்டாகப் பாவித்து வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் குளறுபடிகள் செய்து, முன்கூட்டியே ஒரு திட்டத்தை வகுத்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்புகள் விஞ்ஞானப்பூர்வமாக இல்லை. மக்களின் மனநிலை வேறு. கருத்துக் கணிப்புகள் வேறு. கருத்துக் கணிப்புகள் முந்தைய தேர்தல்களில் பொய்த்துள்ளன. மோடியை மகிழ்ச்சியடைய வைக்கவும், அவருடைய தியானத்திற்கு சக்தி அளிக்கவும் தான் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது", என, கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT