Published : 07 May 2019 11:18 AM
Last Updated : 07 May 2019 11:18 AM

ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

மு.க.ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போவதாக, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கட்சிக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், இன்னும் 25 ஆண்டுகளில் ஸ்டாலின் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு உள்ளது என பேசினார்.

இந்நிலையில், துரைமுருகனின் இந்த பேச்சு மூலம் ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போவது உறுதியாகியுள்ளது என, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, "ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போவதாக ஏற்கெனவே கூறினேன். இப்போது அது உண்மையாகிவிட்டது. தேசிய அரசியலில் சேர்ந்தவர்கள் தான், ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ இதுவரை குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். மாநில கட்சிகள் அதில் போட்டியிட்டது கிடையாது.

ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ எதுவாக இருந்தாலும் நான் காங்கிரஸில் சேர்ந்துவிடுகிறேன், என்னை அடுத்த குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துங்கள் என ஸ்டாலின் காங்கிரஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலைத்தான் இரண்டு நாட்கள் முன்பே சொன்னேன். இதுபற்றி நான் விசாரித்தவர்களும் உண்மைதான் என்கின்றனர்.

இந்தநிலையில், துரைமுருகன், ஸ்டாலின் குடியரசு தலைவர் ஆவார் என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் குடியரசு தலைவர் ஆகட்டும், அமெரிக்க அதிபராகக் கூட வரட்டும், அதைப்பற்றி கவலை இல்லை. அவர் தமிழ்நாட்டை விட்டுப் போனால் சரிதான்" என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x