Last Updated : 29 May, 2019 05:50 PM

 

Published : 29 May 2019 05:50 PM
Last Updated : 29 May 2019 05:50 PM

மோடி எதிர்ப்பு நிலையை மாற்றி இணக்கத்துக்கு மாறும் நாராயணசாமி

மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று மோடி மீண்டும் பிரதமராவதால் அவர் மீதான எதிர்ப்பிலிருந்து இணக்கத்துக்கு மாறுகிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. தேர்தல் முடிவுக்குப் பிறகு மோடி தொடர்பான அவரது பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் புறப்பட்டார்.

புதுச்சேரியில் கடந்த 2016-ல் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு வென்று ஆட்சியமைத்து நாராயணசாமி முதல்வரானார். அப்போது துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களால் தேர்வான அரசு ஒருபுறம், கிரண்பேடி மறுபுறம் என இரட்டை ஆட்சி நீடித்தது. இதனால் மோதல் விஸ்வரூபமெடுத்தது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய அரசை நம்பி வாழும் சூழலே உள்ளது.

கடந்த முறை மத்திய பாஜக அரசை முதல்வர் நாராயணசாமி நாடினார். பலமுறை பலவித கோரிக்கைகளைத் தெரிவித்தார். மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைவிட, மத்திய அரசு நியமிக்கும் துணைநிலை ஆளுநருக்கே இங்கு அதிகாரம். இதனால், மக்கள் வாக்குக்கு மதிப்பில்லை எனும் சூழல் வெளிப்படையாகத் தொடங்கியது.

இதனால் நாள்தோறும் போராட்டம் அதிகரித்தது. ஒருகட்டத்தில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே கிரண்பேடிக்கு எதிராக  முதல்வர் நாராயணசாமியே போராட்டத்தில் இறங்கியதும் நடந்தது. அத்துடன் கிரண்பேடியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார் நாராயணசாமி.

இச்சூழலில் மக்களவைத் தேர்தல் வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ராகுல் பிரதமராவார் என்று பிரச்சாரத்தில் காங்கிரஸ் புதுச்சேரியில் ஈடுபட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் வென்றது.

ஆனால், மத்தியில் பாஜக அதிக இடங்களில் வென்று பிரதமராக மோடி  மீண்டும் பொறுப்பு ஏற்கவுள்ளார்.மத்தியில் பாஜக வென்றவுடன் முதல்வர் நாராயணசாமி தனது நிலைப்பாட்டை மாற்றத் தொடங்கினார். மத்திய அரசையும், மோடியையும் வழக்கமாக விமர்சிக்கும் அவர் தற்போது இணக்கமாகப் பேசத் தொடங்கினார். இன்னும் இரண்டு ஆண்டு காலமே ஆட்சி மீதமுள்ள சூழலில் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளதால், மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மோடியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் நாராயணசாமி குறிப்பிட்டார்.

அத்துடன் புதுச்சேரி கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும். நிதி தர வேண்டும். வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கோரினார்.

மோடி பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்வுக்கு அழைப்பு வந்தால் பங்கேற்பேன். தனக்கு அழைப்பு வரவில்லை என்று நாராயணசாமி குறிப்பிட்டிருந்தார். இச்சூழலில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வந்தது.

இதைத்தொடர்ந்து இன்று பிற்பஜல் முதல்வர் நாராயணசாமி புறப்பட்டார். இதுதொடர்பாக அவரது தரப்பில் விசாரித்தபோது, "நாளை முதல்வர் பிறந்த நாள். வழக்கமாக கர்நாடகத்திலுள்ள மூகாம்பிகை கோயிலில் தரிசிப்பது வழக்கம். அதற்காக முன்கூட்டியே புறப்பட்டார். இரவு அங்கு தங்கிவிட்டு நாளை அதிகாலையில் சாமி தரிசனம் செய்து விட்டு டெல்லி புறப்படுகிறார். பிரதமர் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x