Published : 27 May 2019 03:08 PM
Last Updated : 27 May 2019 03:08 PM

மோட்டார் சைக்கிளில் 1.56 கோடி ரூபாய் கொண்டு வந்த மர்ம நபர்: போலீஸைப் பார்த்ததும் சாலையில் வீசி ஓட்டம்

சென்னை கோட்டூர்புரத்தில் மோட்டார் சைக்கிளில் 1.56 கோடி ரூபாயை எடுத்து வந்த நபர் போலீஸைப் பார்த்ததும் சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். போலீஸார் பணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு 2.30 மணி அளவில் கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமு, காவலர் சக்திவேல்  உள்ளிட்டோர் ரோந்து வாகனத்தில் ரோந்து சென்றனர். அப்போது வரதாபுரம் ஏரிக்கரை அருகே உள்ள லாக் தெருவில் மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் 3 பைகளுடன் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்தார்.

அவரை போலீஸார் நிற்கச்சொல்லி கேட்டபோது தப்பிக்கப் பார்த்தார். போலீஸார் விடாமல் துரத்தியபோது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பைகளை சாலையில் வீசிவிட்டு வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.

கீழே கிடந்த பையை  எடுத்த போலீஸார் அதைத் திறந்து பார்த்தபோது அதிர்ந்துபோயினர். 3 பைகளிலும் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதையடுத்து காவல் ஆய்வாளருக்குத் தகவல் கொடுத்து ஸ்டேஷனுக்கு பணத்தைக் கொண்டுவந்து எண்ணிப் பார்த்தனர்.

3 பைகளிலும் மொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் பணம் இருந்தது. பணத்தை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள போலீஸார் தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட பணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கிய பணம் ஹவாலா பணமா? நள்ளிரவில் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டுசெல்லவேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x