Published : 31 May 2019 02:14 PM
Last Updated : 31 May 2019 02:14 PM

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டைப்போக்க உடனடி திட்டம்: மெட்ரோ வாட்டர் முடிவு

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய சென்னையில் 5 முக்கிய இடங்களில் சிறிய அளவிலான கடல்நீரை  குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையை சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக சென்னைக்கு எப்போது குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. 80 லட்சம் மக்கள் தொகையை நெருங்கி வரும் பெருநகரச்சென்னை குடிநீர் தேவையை முன்னிட்டு தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் வீராணம் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகம் முழுதும் மழை பொய்த்துப்போனது, நீர் நிலைகள் வரண்டு காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் குடிநீர் பஞ்சம் அதிகம் உள்ளது. குடிநீர் பஞ்சத்தை போக்க உடனடி நிவாரணமாக  கடல் நீரை குடிநீராக்கும் சிறிய அளவிலான நிலையங்கள், காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, எம்.ஆர்.சி நகர், திருவான்மியூர் ஆகிய 5 இடங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள, இந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், அடுத்த 6 மாதங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். ஒவ்வொரு நிலையத்திலும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மூலம், ஒரு லட்சம் பேருக்கு, நல்ல தண்ணீரை அளிக்க முடியும்.

5 இடங்களில் ஏற்படுத்தப்படும், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம், 5 லட்சம் பேரின் தாகத்தை தணிக்க முடியும் என, சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இக்குடிநீர் நிலையங்கள் அமைக்கப்ப்டும் இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது, அதனால் முன்னுரிமை அடிப்படையில் காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, எம்.ஆர்.சி நகர், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x