Published : 13 May 2019 11:44 AM
Last Updated : 13 May 2019 11:44 AM

முஸ்லிம் வாக்குகளுக்காக இந்துக்களை இழிவுபடுத்தும் செயல்: கமல்ஹாசன் பேச்சுக்கு ஹெச்.ராஜா கண்டனம்

முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம் என, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்" என கமல்ஹாசன் பேசினார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம். முஸ்லிம் வாக்குகளுக்காக இந்துக்களை இழிவுபடுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் ராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்காத கோழை" என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு, கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததிலிருந்து பாஜகவுக்கு தூக்கம் போனதாக ஒருவர் மறுமொழி பதிவிட்டார்.

அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் ஹெச்.ராஜா, "கமல்ஹாசன் நான் தூக்கம் இழக்கும் அளவுக்கு பெரிய சக்தி அல்ல. இவரால் 1% வாக்குகள் கூட வாங்க முடியாது. ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு இவர் தீவிரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை" என ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x