Published : 26 May 2019 12:00 AM
Last Updated : 26 May 2019 12:00 AM
சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க கடலூர் மாவட்ட நீர்நிலைகளில் இருந்து விநாடிக்கு 74 கனஅடி தண்ணீர் பெறப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் நிலை வீராணம் ஏரியாகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கோடையில் தண்ணீர் பற்றாக்குறையை சமா ளிக்க கடந்த மாதம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வீராணம் ஏரி நிரப்பப்பட்டது. இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியில் இருந்து விநாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 44.90 அடியாக உள்ளது. ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு 39 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் ஏரியில் இருந்து தொடர்ந்து விநாடிக்கு 74 கனஅடி தண்ணீரை தொடர்ந்து அனுப்பிட பொதுப்பணித் துறை அதிகாரிகளும், மெட்ரோ வாட்டர் அதிகாரிகளும் இணைந்து முடிவு செய்தனர்.
அதன்படி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை வாலாஜா ஏரியில் நிரப்பி, அந்த தண்ணீரை பரவனாற்றில் அனுப்பி அங்கிருந்து ராட்சத மின்மோட் டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு வினா டிக்கு 17 கனஅடி தண்ணீர் சென் னைக்கு வீராணம் குழாய் வழியாக தற்போது அனுப்பி வைக்கப்படு கிறது. 5.5 அடி கொள்ளளவு கொண்ட வாலாஜா ஏரியில் தற் போது 5 அடி தண்ணீர் உள்ளது. மேலும் சேத்தியாதோப்பில் இருந்து பண்ருட்டி வரை உள்ள 10-க்கும் மேற்பட்ட போர்வெல்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விநாடிக்கு 18 கனஅடி வீதம், வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆக மொத்தம் விநாடிக்கு 74 கனஅடி தண்ணீர் கடலூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. 2 மாதங்கள் இதுபோல தண்ணீர் அனுப்பி சென்னையின் கோடை குடிநீர் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருக்கும் நிலையில், தொடர்ந்து சென்னைக்கு அதே அளவிலான குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT