Last Updated : 20 Apr, 2019 09:16 AM

 

Published : 20 Apr 2019 09:16 AM
Last Updated : 20 Apr 2019 09:16 AM

புகார் கூறும் பெற்றோரை மிரட்டும் தனியார் பள்ளிகள்: கோடை விடுமுறையிலும் தொடரும் சிறப்பு வகுப்புகள் - நடவடிக்கை எடுக்க கல்வித் துறை தீவிரம்

கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் பற்றி புகார் கூறும் பெற்றோர்கள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதி மீறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, ஏப்ரல் 14-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கம் கடுமை யாக உள்ளதால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் தனியார் பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

ஆனால், சென்னையில் பெரும் பாலான தனியார் பள்ளிகள் விதி களை மீறி சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக தாம் பரம், பெரம்பூர், தியாகராயநகர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற் றோர்கள் கூறும்போது, ‘‘9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடாமல் தனியார் பள்ளிகள் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன. அனைத்து தினங்களிலும் நாள் முழுவதும் வகுப்புகள் நடத்தப்படு வதால் பிள்ளைகள் கடும் மன உளைச்சலில் தவிக்கின்றனர்.

அரசு நடவடிக்கை வேண்டும்

பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்குச் சென்று விடுங்கள். எங்களுக்கு தேர்ச்சி சதவீதமே முக்கியம் என்று மிரட்டு கின்றனர். மேலும், புகார் கூறுபவர் களின் பிள்ளைகளை தனிமைப் படுத்துகின்றனர். இவ்வாறு குழந்தைகளை வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாகப் பார்க்கும் தனியார் பள்ளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தனியார் பள்ளி முதல்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘புதிய பாடத் திட்டம் கடினமாகவும் அதிகமாக வும் உள்ளது. ஆசிரியர்களுக்கே அதைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த பாடத்திட்டத்தைக் கற்றுதர அரசு சார்பில் போதுமான பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை.

ஜூனில் தொடங்கி டிசம்பரில் பாடத்திட்டத்தை முடிப்பது சாத்திய மில்லை. இதில் அக்டோபர், நவம்பரில் பருவமழை காரணமாக திடீரென விடுமுறைகளும் விடப் படுகின்றன. இதுதவிர மாணவர் கள் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராக வேண்டியுள்ளது.

இந்நிலையில் பாடத்திட்டத்தை முடித்து மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண் டிய கட்டாயம் உள்ளது. பெரும் பாலான பெற்றோர்கள் இதை ஆதரிக்கின்றனர். எனினும், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 30-ம் தேதி வரையே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அதன்பின் சிறிது நாட்கள் விடுப்பு அளிக்கப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் கூறியதாவது:

அரசின் அறிவிப்பை மீறி சில தனியார் பள்ளிகள் இத்தகைய தவறான செயல்பாடுகளில் ஈடு படுவது கண்டிக்கத்தக்கது. கோடை வெயில் தாக்கம் அதிகமாக காணப் படுகிறது. தேர்ச்சி சதவீதத்தை தக்க வைக்க சில பள்ளிகள் தவறு செய்வது ஒட்டுமொத்த அமைப்புக் கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு மட்டு மின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் என எல்லோருக்குமே மனஉளைச் சல்தான். அதை உணர்ந்து தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தை கல்வித் துறை முன்கூட்டியே வெளியிட்டதும் இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம்’’ என்றார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் 13-ம் தேதியுடன் நடப்பு கல்வி ஆண்டு வேலை நாட்களை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கல்வித் துறை அதிகாரிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததைத் தனியார் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. மாநிலம் முழுவதும் 40 சதவீத தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு, அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x