Last Updated : 22 Apr, 2019 12:00 AM

 

Published : 22 Apr 2019 12:00 AM
Last Updated : 22 Apr 2019 12:00 AM

வன்முறைக்கு வித்திடும் சமூக வலைதள பகிர்வுகள்: அவதூறு பரப்பினால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை தீவிரம்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், நாட்டில் ‘ஸ்மார்ட்’ செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விட்டதாக டிராய்தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இணையதளத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில்இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். அனைத்து தகவல்களையும் செல்போன் மூலம் பெறுகின்றனர். அதனால் செல்போன்களில் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது.

தப்போது வாட்ஸ்அப், முகநூல்,ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் அதை அடுத்த விநாடியே நண்பர்கள், உறவினர்களுக்கு பலர்பகிர்ந்து விடுகின்றனர். இதனால்வதந்திகள் வேகமாக பரவி வருவதாக போலீஸார் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபோன்றதொரு தகவல்தான் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராதியில் பரவியது. அதன் தொடர்ச்சியாக அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. போலீஸார் தடியடி நடத்தினர். 144 தடை உத்தரவு என அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பிரச்சினைக்கு மூல காரணம் சமூக வலை தளங்களில் பரவிய சர்ச்சைக்குரிய ஆடியோதான் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவதூறு ஆடியோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து கூடுதல் டிஜிபி ஒருவர் கூறும்போது, “சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டமும் பாயும்" என்றார்.

சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்புவர்களை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:வாட்ஸ்அப், முகநூல் உள் ளிட்ட சமூக வலைதளங்களின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது. அதில், பகிரப்படும் தகவல்களை பகிர்ந்தவர்களின் விபரங்களை தெரிந்து கொள்ள அமெரிக்காவின் உதவியை போலீஸார் நாடுவார்கள். முதல் கட்டமாக தங்களுக்கு தேவையான தகவல்கள் குறித்தும், அவர்களின் விபரங்களை அளிக்கும்படியும் மெயில் அனுப்புவார்கள். உடனடியாக சம்பந்தப்பட்டவரின் செல்போன் எண், அவரது பெயர்உள்ளிட்ட விபரங்கள் தமிழகபோலீஸாருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது செய்யப்படுவார். சில நேரங்களில் சிபிசிஐடி, மத்திய உளவுத்துறை மூலம் அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு சற்று காலதாமதம் ஆனாலும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது உறுதி.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x