Published : 09 Apr 2019 12:00 AM
Last Updated : 09 Apr 2019 12:00 AM
தமிழகம் முழுவதும் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளைக் காலி செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வீர வசந்தராயர் மண்டபம் பகுதியில் கடந்த ஆண்டு பிப்.2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோயில் கடைகள் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து மீனாட்சியம்மன் கோயில் வளாகத்திலுள்ள அனைத்துக் கடைகளையும் காலி செய்ய அறநிலையத் துறை உத்தரவிட்டது. தொடர்ந்து புதுமண்டபக் கடைகளும் காலி செய்யப்பட்டன.
இதை எதிர்த்து வியாபாரிகள் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, கடந்த ஆண்டு டிச. 31-க்குள் கடைகளைக் காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் சார்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்து, ஜன.31-க்குள் கடைகளைக் காலி செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள முக்கியக் கோயில்களில் கடைகள் வைக்க அனுமதி மறுத்தும், கோயில் வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளைக் காலி செய்யவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வியாபாரிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், கோயில் வளாகங்களில் உள்ள கடைகளைக் காலி செய்ய வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.சாப்ரே, தினேஷ் மகேஸ்வரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் வளாகங்களில் கடை வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல. அவர்களைக் காலி செய்ய உத்தரவு பிறப்பித்ததில் சந்தேகம் உள்ளது. கோயில் வளாகத்தில் கடை வைக்க அவர்கள் உரிமம் பெற்றுள்ளனர்.
மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அந்தக் காரணத்துக்காக அனைத்துக் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளையும் அகற்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதனால் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளைக் காலி செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT