Published : 05 Apr 2019 09:22 PM
Last Updated : 05 Apr 2019 09:22 PM

தவறான உறவால் விபரீதம்: இளம்பெண்ணை கழுத்தறுத்துக்கொன்று முதியவரும் அங்கேயே தற்கொலை

சேலம் சூரமங்கலத்தில்  வசித்தவர் சித்தாரா (25). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

தனியாக வாழ்ந்து வந்த சித்தாராவுக்கும் அதே ஊரைச்சேர்ந்த இனாமுல்லா (54) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் தவறான உறவாக மாறியுள்ளது.

இதனிடையே வருமானத்திற்காக சூரமங்கலம் சுப்பிரமணியன் நகரில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் கடந்த 7 மாதத்துக்கு முன் சித்தாரா வேலைக்குச் சேர்ந்துள்ளார். தொடர்ந்து அங்கேயே வேலை செய்து வந்துள்ளார்.

சித்தாராவுக்கும் இனாமுல்லாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் அரசல்புரசலாக அவர்கள் உறவினர்களுக்கு தெரியவர கடந்த மாதம் ஜமாத்தை கூட்டி இரு வீட்டாரையும் வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளனர்.

இனி இருவரும் தங்கள் பழக்கத்தை கைவிடவேண்டும் என ஜமாத்தார் பேச்சு வார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. அதை ஏற்று சித்தாரா இனாமுல்லாவுடன் பேசுவதை நிறுத்தினார். ஆனால் இனாமுல்லாவால் அவரை மறக்க முடியவில்லை. இதையடுத்து அவர் சித்தாராவுடன் பேச முயற்சிக்க அவர் சுத்தமாக அவரை தவிர்த்துவிட்டார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த இனாமுல்லா ஒரு முடிவுடன் சித்தாரா வேலை செய்யும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார். கடையில் யாருமில்லாத நிலையில் சித்தாராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சித்தாரா இனியும் தான் அவமானப்பட விரும்பவில்லை ஜமாத் முடிவு என மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இனாமுல்லா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சித்தாரா கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்னர் அங்கேயே கயிற்றில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்துக்கொண்டார். கடைக்குள் இந்த சம்பவம் நடக்கும்போது யாரும் இல்லாததால் இரண்டு மரணங்களையும் யாராலும் தடுக்க முடியவில்லை. பின்னர் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ரத்த வெள்ளத்தில் சித்தாரா கிடப்பதையும், தூக்கில் இனாமுல்லா தொங்குவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து சூரமங்கலம் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இனாமுல்லா கைப்பட எழுதிய 11 பக்க கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். கொலையும் செய்துவிட்டு 11 பக்க கடிதமும் எழுத வாய்ப்பில்லை. ஆகவே அவர் முன்னரே ஒரு முடிவுக்கு வந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு பின்னர் கடைக்கு வந்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x