Last Updated : 18 Apr, 2019 05:47 PM

 

Published : 18 Apr 2019 05:47 PM
Last Updated : 18 Apr 2019 05:47 PM

தொரப்பாடியில் மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல், தொடர் வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

தொரப்பாடியில் மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல், தொடர் வாக்குப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஒரு மணிநேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி அரசு துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி 120-ல் இன்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போது, வாக்குச்சாவடி அலுவலர் சிவக்குமார் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அப்போது 50 வாக்குகள் பதிவான நிலையில், வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் மாதிரி வாக்குப்பதிவுகளை அழிக்க வேண்டியது வாக்குச் சாவடி அலுவலரின் பொறுப்பு. ஆனால், அவர் மாதிரி வாக்குப் பதிவு வாக்குகளோடு தொடர்ந்து வாக்காளர்களையும் வாக்களிக்க அனுமதித்த நிலையில், 153 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், 203 வாக்குகள் பதிவானதாக வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் தெரியவந்துள்ளது.

இதையறிந்த வாக்குச்சாவடி வேட்பாளர்களின் முகவர்கள், தொடர்ந்து வாக்குப்பதிவு நடக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அன்புச்செல்வன், மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்துள்ளார்.

இதையும் முகவர்கள் ஏற்காத நிலையில், வேட்பாளர்களின் முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, 50 வாக்குகள் கழித்துக் கொள்ளப்படும் என எழுத்துப்பூர்வ உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் சமரசமாயினர். பின்னர் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x