Published : 02 Apr 2019 06:18 PM
Last Updated : 02 Apr 2019 06:18 PM
முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசு, எப்படி மக்களைப் பாதுகாக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகரும் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், நேற்று (திங்கட்கிழமை) மாலை மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், '' 'அம்மா' வழியில் ஆட்சி செய்கிறோம் என்கிறார்களே, ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். அவர் எப்படி இறந்தார் என்று யாருக்காவது தெரியுமா? அது இன்னும் மர்மமாகவேதான் இருக்கிறது. முதல்வரையே அப்போலோவுக்கு அனுப்பி, யாரையும் பார்க்கவிடாமல் செய்தனர். ஒரு புகைப்படமாவது வெளியில் வந்ததா?
முதல்வர் பதவி பறிபோன ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதா சமாதிக்குப் போய், 'அம்மா' சாவில் மர்மம் இருக்கிறது என்றார். இப்போது துணை முதல்வர் பதவி கிடைத்தவுடன் வாயை மூடிக்கொண்டார். 'அம்மா' எப்படி இறந்தார் என்று தெரியவில்லை என்கிறார்.
ஜெயலலிதாவை 90 நாட்கள் மருத்துவமனையில் அடைத்துவைத்து, 'அம்மா' இட்லி சாப்பிட்டார், 'அம்மா' தொட்டுக்க சட்னி சாப்பிட்டார் என்று சொன்னார்கள்.
ஜெயலலிதா சாப்பிட்ட இட்லிக்கு என்ன பில் போடப்பட்டது தெரியுமா? 2 இட்லிக்கு 1.5 கோடி. ஒரு இட்லி 75 லட்ச ரூபாய். திடீரென ஒரு நாள் அவர் இறந்துவிட்டார் என்கிறார்கள்.
ஒரு முதல்வருக்கே பாதுகாப்பு கொடுக்காத அரசு, எப்படி பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்? எனவே மறக்காமல் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்'' என்றார் உதயநிதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT