Last Updated : 07 Apr, 2019 12:00 AM

 

Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM

சத்தமில்லாமல் ஒதுங்கிய சுதர்சன நாச்சியப்பன்: புறக்கணிக்கும் கார்த்தி சிதம்பரம் தரப்பு

காங்கிரஸ் என்ன ப.சிதம்பரத்தின் குடும்பச் சொத்தா? எனக் கேட்டு, அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சீட் கொடுக்கக் கூடாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இஎம். சுதர்சனநாச்சியப்பன் முட்டுக்கட்டை போட்டார்.

இதனால் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங். வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைமையிடம் ப.சிதம்பரத்துக்கு இருந்த செல்வாக்கால், நீண்ட இழுபறிக்குப் பிறகு கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த சுதர்சனநாச்சியப்பன், ப. சிதம்பரத்துக்கு எதிராக ஊடகங்களில் ஆவேசமாகப் பேட்டி கொடுத்தார்.

மேலும் அவரது ஆதரவாளர்களும் சிவகங்கையில் கார்த்தியை தோற்கடிக்க உள்ளடி வேலைக்கு ஆயத்தமாகினர். இதனால் அதிருப்தி அடைந்த ப. சிதம்பரம், இதுகுறித்து தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து சுதர்சனநாச்சியப்பனை காங்கிரஸ் தலைமை எச்சரித்தது. இதையடுத்து அவரும் அவசர, அவசரமாக கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவு கொடுத்தார். தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அவர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்யாமல் அமைதி காத்து வருகிறார்.

இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து காங்கிரஸார் கூறியதாவது: சுதர்சனநாச்சியப்பன் எதிர்த்து கேள்வி கேட்டதால், ப.சிதம்பரம் தரப்பினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. மேலும் சுதர்சனநாச்சியப்பனும் தலைமை வலியுறுத்தியதால் தான் வேறு வழியின்றி கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் பிரச்சாரத்துக்கு வராமல் ஒதுங்கிக் கொண்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x