Last Updated : 02 Apr, 2019 12:00 AM

 

Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM

தேர்தல் நடத்தை விதிகளின் தாக்கத்தால் காரைக்கால் வானொலி நேயர்கள் அதிருப்தி

தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சியினர், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுபோல, காரைக்கால் வானொலி நேயர்களிடமும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும், அதற்கேற்ற வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அகில இந்திய வானொலிக்கும், தூர்தர்ஷனுக்கும் உண்டு. அரசியல் பின்புலம் உள்ள திரையுலகினரின் காட்சிகள், பாடல்கள் ஒலி, ஒளிபரப்பப்படுவதில்லை.

தனியார் ஊடகங்கள் பெருகுவதற்கு முன்பு வரை நேயர்களுக்கு இது ஒரு சங்கடமாக தெரிந்தது. ஆனால், தற்போது தனியார் ஊடகங்கள் அதிகரித்துவிட்ட நிலையில், அவற்றுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பெரிதும் பொருந்துவதில்லை. அதனால், தனியார் ஊடகங்களில் பாரபட்சமின்றி அனைவரின் படங்கள், பாடல்கள் இடம்பெறுவதால், தற்போது நேயர்கள் எந்த மாற்றத்தையும் உணர்வதில்லை.

ஆனால், காரைக்கால் அகில இந்திய வானொலி(பண்பலை) நேயர்கள் இப்போதும் கூட தேர்தல் நடத்தை விதியின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். காரைக்கால், நாகை, திருவாரூர் மாவட்டங்கள் முழுமையும், கடலூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் உள்ள லட்சக்கணக்கானோர் காரைக்கால் வானொலி நேயர்களாக உள்ளனர்.

இவற்றில் காரைக்கால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வேறு தனியார் வானொலி ஒலிபரப்பும் கிடையாது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல், நாள்தோறும் ஒலிபரப்பப்பட்டு வந்த நேரலை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. (நேரலையில் பேசும் நேயர்கள், ஏதேனும் அரசியல் சார்ந்து பேசிவிடக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை)அரசியல் பின்புலம் உள்ள நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில், ஏதேனும் ஒரு அம்சம் இருந்தாலும் அப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்படாது.

முன்பைவிட தற்போது திரையுலகினர் அதிக அளவில் அரசியலில் இறங்கியுள்ளதால், பெரும்பாலான பிரபல பாடல்களை நிராகரிக்கும் நிலையே இருக்கிறது. அப்படிப்பட்ட அம்சங்கள் இல்லாத பாடல்களை தேடிக் கண்டுபிடிப்பது வானொலி நிலையத்தாருக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. இது நேயர்களிடையே ஒரு விதத்தில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மயிலாடுதுறை யைச் சேர்ந்த நேயர் எஸ்.புலவேந்திரன் கூறியது: நான் கார் ஓட்டுநராக உள்ளேன். எனது ஒரே பொழுதுபோக்கு காரைக்கால் வானொலி கேட்பதுதான். அடிக்கடி நேரலை நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பங்கேற்று பேசுவதும், விரும்பிய பாடல்களை கேட்பதும் உண்டு. வானொலியில் ஒலிக்கும் நல்ல பாடல்களையும் கேட்டு ரசிப்பேன். என்னைப் போல இப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களுக்கு இந்த வானொலி மட்டுமே பொழுதுபோக்கு அம்சம்.

ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிகளால் விரும்பிய பாடல்களை கேட்க முடியாமலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேச முடியாமலும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல உள்ளது. எப்போது தேர்தல் நடத்தை விதி முடிந்து, முன்புபோலவே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x