Published : 11 Sep 2014 07:45 AM
Last Updated : 11 Sep 2014 07:45 AM

உள்ளாட்சி தேர்தல்: விடுமுறை நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியுமா? - தேர்தல் ஆணையம் விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

பொது விடுமுறை நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியுமா என்பது பற்றி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கை வெளியிடு வதில் தேர்தல் ஆணைய விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை. குறிப்பாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர்களுக்கு விதிமுறை களின் படி அளிக்க வேண்டிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை. ஆகவே, இந்த அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, தேர்தல் தொடர்பாக புதிய அறிவிக்கையை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

7 வேலை நாட்கள்

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தேர்தல் விதிகளின்படி வேட்பு மனு தாக்கல் செய்ய 7 வேலை நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும். எனினும் தற்போதைய உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியானது. செப்டம்பர் 4-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இதற்கிடையே ஆகஸ்ட் 29-ம் தேதி விநாயகர் சதுர்த்தி, 30-ம் தேதி சனிக்கிழமை, 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய காரணங்களுக்காக பொது விடுமுறை நாட்களாகும். இந்த நாட்கள் போக, வேட்பு மனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

ஆகவே, இந்தத் தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்து விட்டு புதிய அறிவிக்கையை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி வாதிட்டார்.

தேர்தல் விதிக்கு என்ன அர்த்தம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டனவா என்பது பற்றியும், அவ்வாறு அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தால் பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற வேலை நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற தேர்தல் விதிக்கு என்ன அர்த்தம் என்பது பற்றியும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x