Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM

ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ரயில் மூலம் தினமும் 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர்

ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, செங்கல்பட்டில் இருந்து ரயில் மூலம் தினமும் 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு நூற்றுக்கணக்கான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்கு புறநகர்மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

குடிநீர் தேவைக்கு...

இவற்றில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இங்கு வரும் பயணிகளின் குடிநீர் தேவைக்கு பெரும்பாலான ரயில் நிலையங்களில் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதர தேவைகளுக்கான தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் போதிய அளவில் பருவமழை பெய்யாததால், ரயில்கள், ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ரயில் நிலையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டு ஏரி

இதற்கிடையே, செங்கல்பட்டு ஏரி மற்றும் சில கிணறுகளில் இருந்து ரயில்கள் மூலம் ரயில் நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வாரியம் மூலம் ரயில் நிலையங்களுக்கு வழங்கிவந்த தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. பெரும்பாலான ரயில்நிலையங்களில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வதால், குடிநீர் பிரச்சினை இல்லை. ரயில் பெட்டிகள், பராமரிப்பு பணிகள், நடைமேடைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற இதர பயன்பாட்டுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

18 பிளாஸ்டிக் தொட்டிகளில்

இதனால், போதிய அளவில் தண்ணீர் கொண்டுவர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செங்கல்பட்டு ஏரியில் ஆய்வு செய்து தற்போது ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருகிறோம். செங்கல்பட்டில் 18 பிளாஸ்டிக் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு கொண்டுவரப்படுகிறது.

அதன்படி, தினமும் 4.5 லிட்டர் லட்சம் தண்ணீர் கொண்டு வருகிறோம். இதுதவிர, பேசின்பிரிட்ஜ், எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் மறுசுழற்சி ஆலைகள் மூலம் தலா 4 லட்சம் லிட்டர் தண்ணீரை தினமும் சேகரிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x