Last Updated : 09 Apr, 2019 08:32 AM

 

Published : 09 Apr 2019 08:32 AM
Last Updated : 09 Apr 2019 08:32 AM

திமுக - தில்லு முல்லு கட்சி; மோடி நல்லவர்: சிகிச்சைக்குப் பின் விஜயகாந்தின் முதல் பேட்டி

திமுக - தில்லு முல்லு கட்சி; மோடி நல்லவர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் அளித்துள்ள முதல் பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது தேமுதிக

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் தமிழகம் திரும்பிவிட்டதால், இம்முறை பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரச்சாரக் களத்துக்கு விஜயகாந்த் வரவே இல்லை.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'கேப்டன் குரல்' என்ற பெயரில் விஜயகாந்த் பேட்டியொன்றை வெளியிட்டுள்ளனர். இப்பேட்டி 1 நிமிடம் 46 விநாடிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதில் நேர்காணல் செய்பவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்குமே ஒற்றை வரியிலேயே பதிலளித்துள்ளார் விஜயகாந்த்.

அந்த வீடியோ பேட்டியில் விஜயகாந்த் பேசியிருப்பதாவது:

நேர்காணல் செய்தவர்: வணக்கம் கேப்டன்

விஜயகாந்த்: வணக்கம் சார்

நேர்காணல் செய்தவர்: எப்படி இருக்கீங்க கேப்டன்?

விஜயகாந்த்: நல்லா இருக்கேன் சார் நான்

நேர்காணல் செய்தவர்: உடல்நிலை எல்லாம் எப்படியிருக்கு?

விஜயகாந்த்: உடல்நிலை எல்லாம் நல்லாயிருக்கு

நேர்காணல் செய்தவர்: அமெரிக்கா போயிட்டு வந்ததுக்கு அப்புறம் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கு?

விஜயகாந்த்: நல்லாயிருக்கேன்... நல்லாயிருக்கேன்

நேர்காணல் செய்தவர்: தமிழக மக்கள் எல்லாருமே இந்தத் தேர்தலைப் பொறுத்த அளவுக்கு, மற்ற பிரச்சாரங்களை விட தேமுதிக தலைவர் எப்போது வருவார், என்ன பேசுவார் என்று காத்துட்டு இருக்காங்க?

விஜயகாந்த்: கூடிய விரைவில் வருவேன் சார். என்ன பேசுவேன் என்பதை அங்கு வந்து கேட்கச் சொல்லுங்கள்

நேர்காணல் செய்தவர்: தொடர்ச்சியா பிரச்சாரத்துக்குப் போவீங்க?

விஜயகாந்த்: அது டாக்டர் அட்வைஸ் படி தான் செய்ய முடியும்.

நேர்காணல் செய்தவர்: இப்போ அதிமுக - தேமுதிக கூட்டணி எப்படியிருக்கு கேப்டன்

விஜயகாந்த்: அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும்

நேர்காணல் செய்தவர்: ஏன் திமுக கூட்டணி தோற்கும் என்று சொல்கிறீர்கள்?

விஜயகாந்த்: திமுக - தில்லு முல்லு கட்சி

நேர்காணல் செய்தவர்: அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான போட்டி எப்படியிருக்கு கேப்டன்?

விஜயகாந்த்: தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கின்ற போட்டி

நேர்காணல் செய்தவர்:அதில் நிச்சயமாக அதிமுக - தேமுதிக வெற்றி.. (என முடிக்கும் முன்பே)

விஜயகாந்த்: தர்மம் தான் ஜெயிக்கும்... தர்மம் தான் ஜெயிக்கும்.

நேர்காணல் செய்தவர்: பிரதமர் மோடியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

விஜயகாந்த்: மோடி நல்லவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.

நேர்காணல் செய்தவர்: தேமுதிக தொண்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

விஜயகாந்த்: நல்லா உழைக்க வேண்டும்; 40-ம் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வறு தன் ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்த பேட்டியில் பேசியுள்ளார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x