Last Updated : 19 Apr, 2019 09:13 PM

 

Published : 19 Apr 2019 09:13 PM
Last Updated : 19 Apr 2019 09:13 PM

தேர்தல் நாளில் பேருந்து வசதி பற்றாக் குறையால் மக்கள் திணறல்; தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டால் அமைச்சர் உத்தரவிட முடியாத நிலை : தமிழக முதல்வர்

‘‘தேர்தல் நாளன்று போதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்தாததால், மக்கள் இடப்பெயர்ச்சியில் பெரும் இடையூறு ஏற்பட்டு திணறியதாக குற்றம்சாட்டியுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘அனைத்து துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஏதும் உத்தரவிட முடியாது. இருப்பினும், கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது,’’ என்றார்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானத்தில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நேற்று காலை புறப்பட்டு சென்றார். முன்னதாக சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் 39 இடங்களிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளனர்.  அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் சூறைக்காற்று வீசியதில் விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால்,  இதுகுறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிந்த பிறகும் இதே கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் நாளான்று போதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்தாததால், மக்கள் இடப்பெயர்ச்சியில் பெரும் இடையூறு ஏற்பட்டு திணறியதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘அனைத்து துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஏதும் உத்தரவிட முடியாது.  எனினும் கூடுதலாக 2000 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x