Last Updated : 15 Apr, 2019 03:15 PM

 

Published : 15 Apr 2019 03:15 PM
Last Updated : 15 Apr 2019 03:15 PM

டிவியை உடைக்கும் விளம்பரத்தில் மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவை ஏற்றார் கமல்

டிவி உடைக்கும் மக்கள் நீதி கட்சி வீடியோ விளம்பரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உத்தரவுக்கு கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ காட்சியில் கமல்ஹாசன் முதலில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார். அதில் மு.க.ஸ்டாலின், மோடி, ஓ.பன்னீர்செல்வம், எச்.ராஜா ஆகியோரது குரல்கள் கேட்கும்.  உடனே ஆவேசம் அடையும் கமல், ரிமோட்டை வீசி எறிந்து டிவி பெட்டியை உடைத்துவிட்டு, மக்களிடம் கேள்வி எழுப்பி தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்பது போல் அமைந்திருக்கும்.

இந்த வீடியோவில் பல்வேறு தலைவர்கள் குரல் கேட்டவுடம், கமல் டிவியை  உடைப்பது போல் அமைந்திருந்ததால் சர்ச்சையானது. இதனால், தேர்தல் ஆணையம் சில வார்த்தைகளின் ஒலியை நீக்கச் சொல்லியது. இதைச் செய்வதற்கு கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரச்சாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும்.

நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே  மாண்பு  தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க  விடுவோம். இன்று ஆள்வோருக்கு  அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின்  சோகம். அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார் கமல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x