Published : 24 Sep 2014 08:09 AM
Last Updated : 24 Sep 2014 08:09 AM

வருமான வரி வழக்கில் ஆஜராவதை எதிர்த்து ஜெயலலிதா மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

வருமான வரி வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

கடந்த 31.3.1993-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் அக்டோபர் 1-ம் தேதி அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் இம்மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

“வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான விவகாரத்தில் சமரச மனு தாக்கல் செய்து, பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள வருமான வரிச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் 25-ம் தேதி நான் தாக்கல் செய்த சமரச மனு, தற்போது வருமான வரித் துறையின் பரிசீலனையில் உள்ளது. சமரச மனு வருமான வரித் துறையின் பரிசீலனையில் இருந்து வருவதால், எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தேன்.

எனினும் வரும் அக்டோபர் 1-ம் தேதி நான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சமரச மனு நிலுவையில் உள்ளபோது, விசாரணை நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டது விதிமுறைகளுக்கு முரணானது. ஆகவே, அக்டோபர் 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்” என்று தனது மனுவில் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இதேபோல் எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “வருமான வரித் துறையிடம் கடந்த ஜூன் 25-ம் தேதி சமரச மனு தாக்கல் செய்தோம். அந்த மனுவைப் பெற்றுக் கொண்டதாக வருமான வரித் துறை மனுதாரருக்கு பதில் அனுப்பியுள்ளது. விதிமுறைகளின்படி சமரச மனு மீது 180 நாட்களுக்குள், அதாவது டிசம்பர் 24-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்பட வேண்டும். இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. சமரச மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வருமான வரித் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கும்படி வருமான வரித் துறை சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்த சமரச மனு நிலுவையில் உள்ளதால், ஏற்கெனவே ஜூலை 1, 24, ஆகஸ்ட் 7, 21 மற்றும் செப்டம்பர் 4-ம் தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை நீதிமன்ற நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார். எனினும் செப்டம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது விசாரணை நீதிமன்ற நீதிபதி மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, அக்டோபர் 1-ம் தேதி மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இது சரியல்ல. ஆகவே, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

சசிகலா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன், “ஒரு பிரச்சினை தொடர்பாக ஒருபுறம் துறை ரீதியான விசாரணை, மறுபுறம் நீதிமன்ற விசாரணை என 2 விசாரணை நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் நடத்த இயலாது” என்று வாதம் செய்தார்.

வருமான வரித் துறை சார்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் கே.ராமசாமி, “இந்த வழக்கின் விசாரணைக்கான கால வரம்பை நிர்ணயம் செய்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மனுதாரர்கள் வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்துள்ள சமரச மனுக்கள், நீதிமன்ற விசாரணைக்கு தடையாக இருக்க முடியாது. மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதால், விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில்தான் மனுதாரர்கள் வைக்க வேண்டும்” என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை இன்று (புதன்கிழமை) காலை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை இன்று (புதன்கிழமை) காலை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x