Last Updated : 04 Apr, 2019 07:33 AM

 

Published : 04 Apr 2019 07:33 AM
Last Updated : 04 Apr 2019 07:33 AM

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல!’- ஊர் எல்லையில் அறிவிப்பு பலகை வைத்த இளைஞர்கள்

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்று ஊர் எல்லையில் சிவகங்கை மாவட்டம், தெக்கூர் கிராம இளைஞர்கள் விளம்பரப் பலகை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வீதிக்கு ஒரு பறக்கும் படை அமைத்தாலும் பணப்பட்டுவாடாவை தடுப்பது பெரும் சிரமம் என்ற நிலையே தற்போது உள்ளது. கடந்த காலங்களில் பணப்பட்டுவாடா காரணத்துக்காகவே ஆர்.கே.நகர், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. வாக்குகளை விற்காதீர் என்று தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தாலும், அதை கண்டுகொள்ளாத போக்கு நிலவுகிறது.

இந்நிலையில், ‘எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல' என்று அறிவிப்புப் பலகை, சிவகங்கை மாவட்டம் பெரியக்கோட்டை ஊராட்சி தெக்கூரில் வைக்கப்பட்டுள்ளது.

அக்கிராமத்தைச் சேர்ந்த வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்றத்தினரும், மகளிர் மன்றத்தினரும் இணைந்து இந்தப் பலகையை வைத்துள்ளனர். இந்த கிராமம் மற்ற ஊர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. தேர்தல் ஆணையத்தால் முடியாததை இந்த கிராமத்து இளைஞர்கள் செய்திருப்பது அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்றத்தினர் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 500 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களிடம், ‘ வாக்குகளை விற்க வேண்டாம். அது நாட்டுக்கும், நமக்கும் அவமானம்' எனப் புரிய வைத்தோம். பெண்கள் உட்பட அனைவரும் ஏற்று கொண்டனர். இதனால் அரசியல் கட்சியினரும் யாரும் பணத்தோடு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஊர் எல்லையில் அறிவிப்பு பலகை வைத்துள்ளோம்.

மீறி பணம் கொடுக்க வந்தால் அவர்களை விரட்டி அடிப்போம். எங்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதாக இருந்தால் மட்டுமே வாக்கு கேட்டு வரலாம். எங்கள் கிராமத்தைப் போல் மற்ற கிராமத்தினரும் மாற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அப்போதுதான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x