Last Updated : 10 Mar, 2019 07:37 PM

 

Published : 10 Mar 2019 07:37 PM
Last Updated : 10 Mar 2019 07:37 PM

இது மினி பொதுத்தேர்தல்?- தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் 18 தொகுதிகள்- வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த உள்ள இந்த 18 தொகுதி இடைத் தேர்தல் மினி பொதுத் தேர்தலாக கருதப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் தினகரன் ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.  2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், ஒட்டப்பிடாரம், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருப்பரங்குன்றம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய 21 சட்டப் பேரவைத் தொகுதிகள் காலியாகவுள்ளன.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நீக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே பேரவைத் தலைவர் பி.தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ், திருவாரூர் தொகுதி எம்எல்ஏ மு.கருணாநிதி ஆகியோரின் மறைவு காரணமாக இரண்டு தொகுதிகளும் காலியாகின. இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது.

மேலும் ஒசூர் தொகுதி எம்எல்ஏ குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் பாலகிருஷ்ணா ரெட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கும் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் அதன் பிறகே அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.

அரசியல் கட்சி தலைவர்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் தினகரன் ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை, 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் நிலையில் குறைந்தபட்சம் 15 தொகுதியிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், அந்த  தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. மக்களவைத் தேர்தலை விடவும் இந்த தொகுதிகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.

அதுபோலவே இந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறிப்பதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என திமுக கணக்கு போடுகிறது. அதற்கு ஏற்பவே தற்போதைய தேர்தல் கூட்டணியையும் அந்த கட்சி அமைத்துள்ளது.

நடக்கவிருக்கும் 21 சட்ட பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், குறிப்பிட்ட தொகுதிகளைக் கைப்பற்றி, முதல்வர் கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என டிடிவி தினகரன் முடிவு செய்து வியூகம் வகுத்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x