Published : 02 Mar 2019 01:29 PM
Last Updated : 02 Mar 2019 01:29 PM
முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்களை ஆளுநர் மாளிகை செயலாளர் ராஜகோபால், தனது தாயைக் கவனிக்க மிரட்டுவதாக, திமுக மருத்துவ அணித் தலைவரும், எம்எல்ஏவுமான பூங்கோதை ஆலடி அருணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பூங்கோதை ஆலடி அருணா இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் செயலராகப் பணியாற்றும் ராஜகோபால், உடல் நலம் இல்லாமல் இருக்கும் அவர் தாயாரைக் கவனிக்க 24 மணிநேரமும் சட்ட திட்டங்களை மீறி அரசுக் கல்லூரிகளில் பயிற்சிபெறும் முதுநிலை மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அவர் இல்லத்திலேயே கவனித்திட அழுத்தம் தந்தார்.
தொடர்நது வீட்டில் வந்து அதிகாரியின் தாயை கவனித்திட இயலாது, அரசு மருத்துவமனையில் உள்ள எங்கள் சேவை முக்கியமாக தேவைப்படுகின்ற ஏழை, எளிய மக்களுக்கு அளித்திட வேண்டும், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என மருத்துவர்கள் கூறியபோது, அவர்களை அதிகாரி மிரட்டியதாகக் கூறினர்.
அண்மையில் திமுக சார்பில நடந்து முடிந்த 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சி சபைக் கூட்டங்களில் மக்கள் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் போதிய அளவு மருத்துவர்கள் இல்லை, துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் கூட இல்லை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அவசரத் தேவைக்கு பதட்டத்தோடு செல்லும் வேளைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையினால் உடனடியாக சிகிச்சை கிடைப்பதில்லை என்ற பிரச்சினைகளை முன்வைத்தனர்.
உயிர் காக்க வேண்டிய மருத்துவர்களைத் தங்கள் சுயதேவைக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவது மனிதநேயமற்ற செயல்.
முதல்வர் உடனடியாக அதிகாரி மீது விசாரணை நடத்திட வேண்டும். மேலும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மருத்துவர்களை அதிகாரியின் இல்லத்திற்கு அனுப்ப பரிந்துரை செய்தவர்கள் மேல் அதிகாரிகள் யார் என கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சுயமரியாதை , சமூக நீதி, சகோதரத்துவம் ஆகிய நெறிகளைப் பின்பற்றிட வேண்டும் என பிறந்தநாள் செய்தியாக திமுக தலைவர் அறிவுறுத்திய நிலையில் இன்றைய ஆளும் கட்சியினரும் அவர்களோடு அதிகாரிகளும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆதிக்க உணர்வோடு செயல்படுவது கண்டனத்துக்குரியது" என பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT