Last Updated : 11 Mar, 2019 11:03 AM

 

Published : 11 Mar 2019 11:03 AM
Last Updated : 11 Mar 2019 11:03 AM

மதுரை சித்திரைத் திருவிழா எப்போது? விவரம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் விவரங்களை இன்று (12.3.19) மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மேலும் அதேசமயத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தமிழகத்தில், குறிப்பாக தென்மாவட்டங்களில் மிக முக்கியமான திருவிழா மதுரைச் சித்திரைத் திருவிழா. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பத்து, பனிரெண்டு நாள் விழா அமர்க்களப்படும். அதேபோல், அழகர்கோவிலில் கள்ளழகர் ஆலயத்திலும் அதேசமயத்தில் கோலாகலமாக விழா நடைபெறும்.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், அழகர் எதிர்சேவை, அழகர் வைகையாற்றில் இறங்குதல் எனும் வைபவங்கள் சிறப்புற நடைபெறும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15ம் தேதி அன்று பட்டாபிஷேகம் நடக்கிறது. அதையடுத்து மீனாட்சி திக் விஜயமும் 17ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 18ம் தேதி மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

அதேபோல், கள்ளழகர், அழகர்கோவிலில் இருந்து மதுரையை நோக்கிக் கிளம்பி வரும்போது எதிர்சேவை எனும் வரவேற்பு நிகழ்ச்சி விடியவிடிய நடைபெறும். இந்த நிகழ்ச்சி, 18ம் தேதி அன்று நடைபெறும். அன்றைய தினம் மதுரைக்குள் வந்துவிடுவார் அழகர். மறுநாள் 19ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் பிரசித்தி பெற்ற வைபவம் லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறும்.

மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்கள், சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். அதேபோல், மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தில் இருந்து வெளியூரில் பணிநிமித்தமாக வாழ்ந்து வருபவர்கள், இந்த விழாவுக்கு வந்துவிடுவார்கள்.

இந்த முறை ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழா சமயத்தில், தேர்தல் வருவதால், வாக்குப்பதிவு குறைய வாய்ப்பு இருப்பதாகவே பொதுமக்களும் அரசியல் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு (மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்) மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா எப்போது தொடங்கி எப்போது நிறைவுறும் என்பது தொடர்பான முழு விவரங்களையும் இன்று (12.3.19) மாலைக்குள் அனுப்பிவைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x