Published : 06 Mar 2019 08:13 PM
Last Updated : 06 Mar 2019 08:13 PM
புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலுவை இடமாற்றம் செய்யக் கோரி அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் ஒருவாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலுவை இடமாற்றம் செய்யக் கோரி அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், கடந்த 2015-ம் ஆண்டுமுதல் புதுச்சேரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள கந்தவேலு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. மேலும், இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணைய விதிகளின்படி, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு பதவிக்காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், சில மாநிலங்களில் ஏழு ஆண்டுகள் வரை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பணியாற்றியுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு மட்டும் தான் எனவும் தெரிவித்தார்.
இந்த வாதத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT