Published : 19 Mar 2019 03:32 PM
Last Updated : 19 Mar 2019 03:32 PM
அண்ணா, எம்ஜிஆர் சமாதியில் 54 பேருக்கு துப்பரவு, தோட்டப் பராமரிப்பாளர் பணிக்கான டெண்டர் தமிழில் அளித்தால் நிராகரிக்கப்படும் என அரசுத்துறையே அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் சமாதியில் துப்பரவு, தோட்டப் பராமரிப்பாளர், எலக்ட்ரிஷியன், பிளம்பர் ஆகிய பணிக்கு 54 பேர் நியமனம் செய்ய செய்தி மக்கள் தொடர்புத்துறை தனியாருக்கு டெண்டர் விடுவதற்கான ஆவணம் தமிழில் இருந்தால் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள டெண்டர் விதிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது:
''செய்தி மக்கள் தொடர்புத் துறையால் நிர்வகிக்கப்படும் அண்ணா நினைவகம், எம்ஜிஆர் நினைவகம் ஆகியவற்றைப் பராமரிக்க 2 ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க டெண்டர் முலம் விண்ணப்பிக்கலாம்.
துப்பரவுப் பணி மற்றும் சுத்தம் செய்பவர் பணிக்கு 40 பேரும், தோட்டப் பராமரிப்பாளர் பணிக்கு 10 பேரும், எலட்ரிக்கல், பிளம்பர் பணிக்கு 4 பேரும் என 54 பேர் நியமிக்க வேண்டும். அவர்கள் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் இந்தப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனம் அதற்கு தேவையான அதிநவீன கருவிகளை வைத்திருக்க வேண்டும்.
மேலும் துப்பரவுப் பணிக்குத் தேவையான பாதுகாப்புக் கருவிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஒருவர் பணியில் 6 மாதம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். டெண்டர் ஆவணங்கள் மற்றும் இணைப்பு ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டும் இருக்க வேண்டும். டெண்டர் தொடர்பான ஆணவங்கள் தமிழில் இருந்தால் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அளிக்க வேண்டும்.
அவ்வாறு மொழி பெயர்த்து அளிக்காத டெண்டர் ஆவணங்கள் நிராகரிக்கப்படும். இதற்கான டெண்டரில் ஏப்ரல் 2-ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். துப்பரவு மற்றும் சுத்தம் செய்யும் பணிக்கு 8-வது தேர்ச்சி பெற்று இருப்பதுடன், பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தோட்டப் பராமரிப்பாளர் பணிக்கு 8-வது தேர்ச்சியும், பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
எலக்ட்ரிக்கல், பிளம்பர் பணிக்க ஐடிஐ பயிற்சி முடித்து, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. =
தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள டெண்டர் ஆவணம் தமிழில் இருந்தால் நிராகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டித்துளளார். ''தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள ஒப்பந்தத்திற்கான ஆவணம் தமிழ் மொழியில் இருந்தால் நிராகரிக்கப்படும் என அதிமுக அரசு குறிப்பிட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடங்களில் பணியாற்றுவதற்கான ஒப்பந்த ஆவணங்களில்கூட தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது என்பது வெட்கக்கேடு ஆகும்'' என அவர் கண்டித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT