Published : 27 Mar 2019 09:56 AM
Last Updated : 27 Mar 2019 09:56 AM
மன்னார்குடியில் உள்ள பட்டாசுக் கிடங்கில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கிடங்கு முழுவதும் வெடித்து தரைமட்டமானதில், அங்கே இருந்த 6 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் பாமணி ஆற்றங்கரைப் பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு திருவிழாவுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் தயாரிப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இன்று 27ம் தேதி காலையில் பட்டாசுக் கிடங்கு திடீரென தீவிபத்துக்கு உள்ளானது. மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்ததில், பட்டாசுக் கிடங்கு மொத்தப் பகுதியும் தரைமட்டமானது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிடங்கில் பணியாற்றிக் கொண்டிருந்த சுரேஷ், பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு, வீரய்யன் ஆகிய ஆறு பேரும் இந்த விபத்தில், உடல் சிதறி பலியானார்கள்.
பட்டாசுக் கிடங்கில் தீவிபத்து என்ற செய்தி அறிந்த மன்னார்குடி மக்கள், அந்த இடத்துக்கு விரைந்தனர். மேலும் போலீசார் மற்றும் உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தீ விபத்து எதனால் ஏற்பட்டது, இந்தக் கிடங்கு வைத்திருப்பதற்கு உரிய உரிமங்கள் பெறப்பட்டுள்ளதா என்பதெல்லாம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT