Last Updated : 14 Sep, 2014 12:10 PM

 

Published : 14 Sep 2014 12:10 PM
Last Updated : 14 Sep 2014 12:10 PM

தமிழகத்தில் அடையாள ஆவணங்களுக்காக ஏங்கும் ஆதரவற்ற குழந்தைகள்

தமிழகத்தில் உள்ள காப்பகங் களில் வளரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் முதல் ஜாதி சான்றிதழ் வரையிலான ஆவணங்கள் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தமிழகத்தில் பெற்ற தாய், தந்தையரால் கைவிடப்பட்ட குழந்தைகளும், தாய், தந்தை உறவுகளை இழந்த குழந்தைகளும் ஆதரவில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதுபோன்ற குழந்தைகள், அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வளர்க்கப்படுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 68 ஆதர வற்ற குழந்தைகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1934 ஆண் குழந்தைகளும், 2734 பெண் குழந்தைகளும், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் பெறப்பட்ட 1030 குழந்தைகள், சைல்டு லைன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல ஒவ்வொரு மாவட் டத்திலும் 5 ஆயிரம் குழந்தைகள் வரை ஆதரவற்ற சூழலில் வளர்ந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஆதரவற்ற நிலையில், காப்பகங்களில் வளர்க் கப்படுகின்றனர்.

உறவினர்கள் உள்ள குழந்தை களை தவிர்த்து, யாருமே இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதரவற்றவர் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என அரசு ஆவணங்கள் பெறுவதில், நடைமுறை சிக்கல் களால் காப்பகங்கள் அவதியுற்று வருகின்றன.

பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அனாதை குழந்தைகள் பிறப்பு அறிய முடியாத நிலையில், அவர்கள் கண்டெடுக்கப்பட்ட நாளை, அரசு காப்பகங்களில் பதிவு செய்கின்றனர். இவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறும்போது, சட்டரீதியான பல்வேறு நடை முறைகளை பின்பற்ற வேண்டி யுள்ளது. ஆதரவற்ற குழந்தை களை தத்தெடுப்பவர்கள் குழந்தை பிறப்பு சான்றிதழ் வாங்கிட வேண்டுமெனில் நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காண வேண்டியுள்ளது. அதன்பின், காப்பகத்தில் வைக்கப் பட்ட பெயரை மாற்றி, தத்தெடுப் பவர்கள் வைக்கும் பெயரை மாற்றம் செய்கின்றனர். தத்தெடுக்கப்படாத குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறப்படுவதில்லை. அவர்களை நேரடியாக பள்ளிகளில் சேர்த்து, கல்வி நிறுவனம் அளிக்கும் மாற்று சான்றிதழையே பிறந்த தேதி அடையாளமாக கொண்டு வளர்க்கின்றனர்.

தாய், தந்தையர் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஜாதி குறிப்பிடுவதிலும், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறுவதிலும் நடை முறை சிக்கலை காப்பகங்கள் தினம்தோறும் சந்தித்து வருகின் றன. பிறப்பு சான்றிதழ் பெற மட்டும் ஒரு குழந்தைக்கு வழக்கறிஞர் கட்டணம் உள்பட 4 ஆயிரம் ரூபாய் வரை காப்பகங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளதால், பிறர் நிதியில் காப்பகம் நடத் தும் நிலையில், அதற்கான ஆவணங்களை வாங்குவதற்கு நிதி பற்றாக்குறையால் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவகி கூறியதாவது:

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் நீதிமன்ற நடை முறையை பின்பற்றி அளிக்கப் படுகிறது. இதுசம்பந்தமாக காப்பகத்தில் உள்ளவர்கள் முறை யிட்டால், அவர்களுக்கு உதவி செய்யப்படும். ஆதார் அட்டை வழங்குவது சம்பந்தமான நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்கவுள்ளது. இதன் மூலம் அவர் களுக்கு அடையாள ஆவணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் சேவியர் கூறியதாவது:

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குழந்தைகளிடம் எவ்வித ஆவணங்களையும் வாங்காமல், அவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வி நிறுவனங்கள் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங் களை கேட்கிறது. சமீபத்தில் சேலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆவணங் கள் இல்லாத காரணத்தைக் காட்டி, குழந்தைகள் சிலரை 14 நாள்கள் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளனர். காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரேஷன் அட்டை வழங்குவதன் மூலம் அவர்கள் உணவு தேவை பூர்த்தி அடையும். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் உள்ள தற்போதைய நடைமுறைகளில் இருந்து, ஆதரவற்ற குழந்தை களுக்கு விலக்கு அளித்து, சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். அரசின் ஆவணங்கள் ஏதுவும் இல்லாமல் குழந்தைகள் வளர்வதால், அவர்களுக்கான குடியுரிமை கேள்விகுறியாகும் என்பதால், ஆதரவற்ற குழந்தைகள் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு கருணை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x