Published : 27 Mar 2019 10:15 AM
Last Updated : 27 Mar 2019 10:15 AM

பாலியல் பலாத்காரம் செய்து 6 வயது சிறுமி கொலை: உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கோவை மாவட்டத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த மனவேதனையளிக்கிறது.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான பின்னணியில், அதே மாவட்டத்தில் மேலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை காணாமல் போன குழந்தையைத் தேடி கிடைக்காமல் இரவு 8 மணிக்கு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் குழந்தையினுடைய வீட்டுக்கு அருகிலேயே, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு குழந்தையின் சடலம் கிடைத்துள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.

பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், வழக்கு பதிவு செய்து,குற்றமிழைத்தவரை கைது செய்யும் வரையில் உடலை வாங்கமாட்டோம் என்று பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் இருக்கின்றனர். தங்களுக்கு யார் மீது சந்தேகம் என்பதையும் பெற்றோர்கள் காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்டுள்ள இந்தகோரச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. குரூரமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது, போஸ்கோ சட்டம் உட்பட வழக்கு பதிவு செய்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x