Last Updated : 07 Mar, 2019 09:51 AM

 

Published : 07 Mar 2019 09:51 AM
Last Updated : 07 Mar 2019 09:51 AM

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு போக்குவரத்தில் சரிவு: உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா, மலிண்டோ ஏர், லங்கன் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் மூலம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, அலையன்ஸ் ஏர், இன்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் மூலம் திருச்சியிலிருந்து சென்னை, கொச்சின், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு விமான சேவைகள் மூலம் கடந்த 2016-17-ம் ஆண்டில் 11,90,577 பேர், 2017-18-ம் ஆண்டில் 13,76,254 பேர் பயணம் செய்திருந்தனர். அதேபோல, உள்நாட்டு விமான சேவைகள் மூலம் 2016-17-ம் ஆண்டில் 1,68,870 பேர், 2017-18-ம் ஆண்டில் 1,38,030 பேர் பயணம் செய்திருந்தனர்.

சேவை குறைப்புஇந்நிலையில், அண்மை காலத்தில் நடைபெற்ற நிகழ்வு களால் திருச்சி விமானநிலையத்தின் வெளிநாட்டு போக்குவரத்தில் சரிவு ஏற்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 915 வெளிநாட்டு விமான சேவைகளில் 1,31,651 பயணிகளை கையாண்டிருந்த திருச்சி விமான நிலையம், 2019 ஜனவரி மாதத்தில் 816 விமான சேவைகளாக குறைந்து, 1,22,184 பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது. இதன்மூலம் விமான சேவைகளின் எண்ணிக்கையில் 10.8 சதவீதமும், பயணிகள் எண்ணிக்கையில் 7.2 சதவீதமும் சரிவு ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு பயணிகள் அதிகரிப்பு

அதேசமயம், உள்நாட்டு போக்குவரத்தில் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 268 விமான சேவைகளின் மூலம் 14,243 பேர் பயணம் செய்திருந்தனர். 2019 ஜனவரியில் விமான சேவை 518 ஆக உயர்ந்து, பயணிகளின் எண்ணிக்கையும் 27,477 என உயர்ந்துள்ளது. இதன்மூலம் விமான சேவைகளின் எண்ணிக்கையில் 93.3 சதவீதமும், பயணிகளின் எண்ணிக்கையில் 92.9 சதவீதமும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது திருச்சி விமான நிலையம்.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘திருச்சி- மலேசியா இடையேயான ஏர் ஏசியா விமான சேவை 4-ல் இருந்து, 3 ஆக குறைக்கப்பட்டு விட்டது. இதே வழித்தடத்தில் மலிண்டோ ஏர் நிறுவனமும் தினந்தோறும் தனது ஒரு சேவையை குறைத்துக் கொண்டது. இதுதவிர, திருச்சியிலிருந்து தாய்லாந்துக்கு வாரந்தோறும் 4 சேவைகளை அளித்து வந்த தாய் ஏர் ஏசியா நிறுவனம் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது. மேலும் திருச்சி-சார்ஜா வழித்தடத்தில் இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும், வாரத்துக்கு 2 சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வெளிநாட்டு விமானப் போக்குவரத்தில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதிலிருந்து மீண்டு, வளர்ச்சியைப் பெறுவோம்’’ என்றனர்.

பயணிகள், நுகர்வோர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தங்கம், கரன்சி, போதைப்பொருள் கடத்தலை தடுப்பதாகவும், வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பதாகவும் கூறி, திருச்சி விமானநிலையத்தில் சுங்க (கஸ்டம்ஸ்) அதிகாரிகள் அதிகமாக கெடுபிடி காட்டுகின்றனர். கடத்தலில் தொடர்பில்லாத பயணிகளையும் தரக்குறைவாக நடத்துவது, நீண்டநேரம் காக்க வைப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல குடியேற்றப் பிரிவு (இமிகிரேன்) அதிகாரிகள் சிலர், விசாரணை என்ற பெயரில் ஒருமையில் பேசி, பயணிகளின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படுத்துகின்றனர். இவற்றால் பாதிக்கப்படும் சில பயணிகள், ஒட்டுமொத்தமாக திருச்சி விமானநிலையம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பரப்பு வதால் இங்கு வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது. இப்பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, விமானநிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், திருச்சியிலிருந்து குவைத், தோஹா, ஜெட்டா உள்ளிட்ட வளைகுடா நகரங்களுக்கு விமான சேவை அளிக்கவும், மலேசியா, சிங்கப்பூருக்கு கூடுதல் விமான சேவைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.

ஒரே மாதத்தில் அதிக பயணிகள்

கடந்த ஜனவரி மாதம் திருச்சி விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 518 உள்நாட்டு விமான சேவைகளில் 27,477 பேரும், 816 வெளிநாட்டு விமான சேவைகளில் 1,22,184 பேரும் பயணித்துள்ளனர்.

உள்நாடு, வெளிநாடு என இரண்டிலும் சேர்த்து கடந்த ஜனவரியில் மட்டும் 1,49,661 பயணிகள் திருச்சி வழியாக பயணம் செய்துள்ளனர். விமானநிலையம் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை யிலான காலகட்டத்தில், ஒரே மாதத்தில் அதிக பயணிகளை கையாண்டு சாதனை படைத்த பெருமை, கடந்த ஜனவரி மாதத்துக்கு கிடைத்துள்ளதாக திருச்சி விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x