Published : 26 Feb 2019 03:47 PM
Last Updated : 26 Feb 2019 03:47 PM

சென்னையில் சட்டவிரோதமாக இயக்கப்படும் பைக் டாக்ஸி: 18-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சென்னையில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை வைத்து பைக் டாக்ஸி வாகனங்கள் செயல்படுகின்றன. இவ்வாறு செயல்பட்ட 18க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆனாலும் சென்னையில் சட்டவிரோத பைக் டாக்ஸிகள் இயங்குகின்றன.

உலகம் முழுவதும் சில குறிப்பிட்ட பெரிய நிறுவனங்கள் டாக்ஸி சேவையை நடத்தி வருகின்றன. இதில் முக்கியமான நிறுவனங்களில் ஓலாவும் ஒன்று. இதேபோன்று மற்றொரு நிறுவனமும் சேவை வழங்கி வருகிறது. சமீப காலமாக சென்னையில் மோட்டார் பைக் டாக்ஸி சட்டவிரோதமாக இயக்கப்படுகிறது.

இதில் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். பைக் டாக்ஸி கேட்பபவர்களுக்கு வழக்கமாக கால் டாக்ஸி அனுப்புவது போன்று மோட்டார் சைக்கிள் பைக் டாக்ஸியை நிறுவனம் அனுப்பும். வழக்கமாக தனி நபர் ஒருவர் ஒரு இடத்துக்கு பயணம் செய்ய கால் ஆட்டோவுக்கு ரூ.100, கால் டாக்ஸிக்கு ரூ.150 என்றால் பைக் டாக்ஸிக்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் மட்டுமே ஆகும்.

வேலை இல்லா இளைஞர்கள் ஸ்விக்கி, உபேர், சொமெட்டோ போன்ற நிறுவனங்களுக்காக உணவு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவது போன்று இந்த பைக் டாக்ஸியிலும் தங்கள் மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்து இயக்குகின்றனர்.

இதுபோன்ற பைக் டாக்ஸிகளுக்கு முறையான அனுமதி இல்லை. மோட்டார் வாகனச்சட்டப்படி மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு இயக்கக்கூடாது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமாக பைக் டாக்ஸி இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் கே.கே.நகர் ஆர்டிஓ அதிகாரிகளே கடந்த வாரம் பைக் டாக்ஸிகளை வாடிக்கையாளர்கள் போன்று புக் செய்தனர். அவ்வாறு புக் செய்தவுடன் வந்த பைக் டாக்ஸிகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டதில் பிரபல நிறுவனம் மூலம் வந்த 10 மோட்டார் சைக்கிள்களும், மற்றொரு தனியார் நிறுவனம் மூலம் இயக்கப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்களும் பிடிபட்டன.

மொத்தம் 18 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர். இன்னும் நடவடிக்கை தொடரும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். மோட்டார் வாகனச் சட்டப்படி மோட்டார் சைக்கிள்களை இயக்க இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர தமிழகத்தில் அனுமதி இல்லை.

அவ்வாறு இயக்க அனுமதி பெற்றால் அது பொதுப்பதிவு செய்யப்பட்ட மஞ்சள் கலர் நம்பர் பிளேட்டுடன் கூடிய வாகனமாக இருக்கவேண்டும். அதற்குப் பின்னால் அமரும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு, தனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது, வாகனக் காப்பீடு தனி என பல நடைமுறைகள் உள்ளன.

வாகன ஓட்டியுடன் வாடிக்கையாளரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் போன்ற விதிகள் உண்டு. ஆனால் இவை எதையும் பின்பற்றாமல் தனியார்மூலம் இயக்கப்படும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளருக்கு எவ்வித விபத்துக் காப்பீடும் கிடைக்காது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பைக் டாக்ஸிகளை போக்குவரத்து அதிகாரிகள் கைப்பற்றியதை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் பைக் டாக்ஸி இயக்கப்படமாட்டாது என உறுதியளித்துள்ளது. ஆனால் மற்றொரு நிறுவனம் தற்போது வரை பைக் டாக்ஸிகளை புக் செய்கிறது. அதற்கான நடைமுறை அந்தச் செயலியில் உள்ளது.

இதற்கிடையே நேற்று மதியம் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தை முற்றுகையிட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பைக் டாக்ஸிகளை இயக்கக்கூடாது என போராட்டம் நடத்தினர். தற்போது சட்டவிரோதமாக இயக்கப்படும் பைக் டாக்ஸி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x