Last Updated : 10 Feb, 2019 08:26 AM

 

Published : 10 Feb 2019 08:26 AM
Last Updated : 10 Feb 2019 08:26 AM

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களை நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்க திட்டம்

சென்னையில் இருந்து மதுரைக்கு 5 மணி நேரத்துக்குள் செல்லலாம் என கோயம்பேட்டில் ஆம்னி பஸ் புரோக்கர்கள் கூவிக்கூவி அழைப்பதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். 462 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்துக்குள் கடப்பது என்றால் மணிக்கு குறைந்தபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விபத்து பகுதிகளை 'பிளாக் ஸ்பாட்' என அறிவித்து உள்ளன. மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 112-ல் வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 93 இடங்கள் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டு அதிகபட்சம் மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என 20.12.2017-ல் மாவட்ட நிர்வாகம் அரசிதழில் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை தொடங்கி, மாவட்ட எல்லையான ஓங்கூர் வரையில் அதிக அளவில் விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றில் சிக்குவதும் சென்னை - தென் மாவட்டங்கள் இடையே செல்லும் ஆம்னி பஸ்களே. ஆனால், ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதாக தெரியவில்லை.

வேக குருடால் விபத்து

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியது: நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் அதிவேகம். நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனத்தின் கதவுகளை முழுவதுமாக அடைத்து விட்டு ஏசியை போட்டுக் கொண்டு செல்லும்போது வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போதுகூட சாதாரணமாகவே தெரியும்.

இதனை, வேக குருடு (Speed blindness) என்று கூறுகின்றனர். முன்பின் செல்லும் வாகனங்களின் வேகமும் உங்களது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் உங்கள் வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வதுபோன்ற மாயை மூளைக்கு ஏற்பட்டும். அந்த அசுர வேகத்தில் திடீரென பிரேக் பிடித்தால்கூட அது பலனளிக்காது.

உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும். இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். சில வேளை சாலையில் மணல் படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். மேலும் வாகனத்தின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும். இந்த வேக குருடு வராமல் இருக்க அடிக்கடி ஸ்பீடோ மீட்டரில் ஒரு கண் வைக்க வேண்டும் என்று கூறினர்.

அதிகவேகமாக செல்லும் வாகனங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் எஸ்பி ஜெயகுமாரிடம் கேட்டபோது, "அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க வாய்ப்பில்லை. அடுத்தடுத்து வரும் வாகனங்கள், நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மோதும் வாய்ப்புள்ளது.

அதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகம் செல்லும் வாகனங்களில் பதிவெண்ணை படம் பிடிக்கும் கண்காணிப்புக் கேமராக்களை 'நகாய்' என்கிற தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (NHAI) அமைக்க உள்ளது. அப்படி அமைக்கப்படும்போது போக்குவரத்து போலீஸாரால் அடுத்து வரும் சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் அதிவேகத்துக்கான அபராதம், மற்றும் வழக்கு தொடர்பான விவரம் உள்ள நோட்டீஸ் வழங்கப்படும்.

இதன்மூலம் வாகனங்களின் அதிவேகத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும். 'நகாய்' ஒத்துழைப்புடன் விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x