Published : 11 Feb 2019 09:13 PM
Last Updated : 11 Feb 2019 09:13 PM
திரையரங்குகளுக்குள் உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்துச் செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில் மனுவில், “திரையரங்குகளுக்கு செல்லும் பார்வையாளர்கள் குழந்தைகளுக்கான உணவு, குடிநீர் உட்பட எந்த பொருள்களையும் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
திரையரங்களில் உள்ள உணவகங்களில் கூடுதல் விலைக்கு உணவுகள் விற்கப்படுவதோடு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களே விற்பனை செய்யப்படுகிறது.
திரையரங்குகளுக்கு வெளி உணவுகளை எடுத்து செல்வதை எந்த சட்டமும் தடை செய்யாத நிலையில் , வீட்டில் இருந்து உணவுப்பொருட்களை தடுப்பது மனித உரிமை மீறிய செயல்.” என குறிப்பிட்டுள்ளார்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, திரையரங்கங்கள் என்பது தனியார் நிறுவனம் என்பதால் அங்கு வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்வதற்கு அனுமதி கேட்க எந்த சட்டத்திலும் உரிமை வழங்காத நிலையில், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT