Last Updated : 12 Feb, 2019 08:05 AM

 

Published : 12 Feb 2019 08:05 AM
Last Updated : 12 Feb 2019 08:05 AM

திமுக, அதிமுக, பாஜக, அமமுக அல்லாத 3-வது அணியை அமைக்க கமல் கட்சி திட்டம்: தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை தவிர்த்து தமிழகத்தில் 3-வது அணி அமைந்தால் கூட்டணி அமைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு எடுத்துள்ளது. கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிட தயாராக இருக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்சி தொடங்கியதில் இருந்தே காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நெருக்கம் காட்டி வந்ததால் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் திமுக குறித்து கடுமையான விமர்சனைகளை முன்வைத்தார். திமுகவும் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுவது கேள்வி குறியாகியுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி பட்டியல் தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி திமுக, அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது.

இக்கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய 3-வது அணி அமைந்தால் அக்கூட்டணியில் இணையலாம் அல்லது தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:திமுக, அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டால் அடுத்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்போது மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற முடியாது என்று கருதுகிறோம்.

எனவே, தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய 3-வது அணி அமைந்தால் கூட்டணியில் இணைவோம். இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம். தனித்து போட்டியிட்டாலும் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள பணிகளை தொடங்கும்படி நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x