Published : 24 Feb 2019 10:54 AM
Last Updated : 24 Feb 2019 10:54 AM

4 மாநில ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்ற வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயில் திருவிழா: 10 ஆயிரம் பேருக்கு சுடச்சுட பிரியாணி

மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களால் நடத்தப்பட்ட பிரியாணி திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. 4 மாநிலங்களைச் சேர்ந்த 500 ஓட்டல் உரிமையாளர்கள் இணைந்து இவ்விழாவை கோலாகலமாகக் கொண்டாடினர்.

மதுரையை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியிலும் சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ‘முனியாண்டி விலாஸ்’ என்ற பெயரில் அசைவ உணவகங்களை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அசைவ உணவுக்கு புகழ்பெற்ற ஹோட்டல் இது.

இவர்களின் காவல் தெய்வமான முனியாண்டி கோயில் வடக்கம்பட்டியில் உள்ளது. இங்கு பிரியாணி திருவிழாவை ஆண்டுதோறும் நாயுடு, ரெட்டியார் சமூகத்தினர் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ரெட்டியார் சமூகத்தினர் விழா கொண்டாடினர். இதற்காக 4 மாநிலங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் களை நடத்திவரும் 500-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வடக்கம் பட்டிக்கு வந்தனர்.

நேற்று மேளதாளத்துடன் நடந்த பால்குடம், பூத்தட்டு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற னர். பெண்கள் ஊர்வலமாக திரண்டு சென்று பொங்கல் வைத்தனர்.

பின்னர் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 100 ஆடுகள், 600 சேவல்கள் பலியிடப்பட்டன. பிரத்யேக சமையல் கலைஞர் களைக் கொண்டு 2,000 கிலோ அரிசியில் பிரம்மாண்ட அண்டாக்களில் விடிய, விடிய அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் பிரியாணியை படையல் வைத்து முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கிராமத்தினர் பிரியாணி பிரசாதம் வாங்கிச் சென்றனர்.

ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட பலருக்கு தூக்கு வாளி, பெட்டிகளில் பிரியாணி வழங்கப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை பெற்றுச் சென்றனர்.

இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை கடந்த 1937-ம் ஆண்டில் வடக்கம்பட்டியைச் சேர்ந்த குருசாமி என்பவர் தொடங்கினார். அதற்கு அடுத்து ராமு என்பவர் கள்ளிக்குடியிலும் தொடங்கினார். அதற்கடுத்து விருதுநகர், மதுரை நகர் தமிழகம் முழுவதும் தற்போது உலகமெங்கும் 1,500-க்கும் அதிகமான ஹோட்டல்கள் முனியாண்டி சுவாமி பெயரில் செயல்படுகின்றன.

இந்த ஹோட்டல்களுக்கு வரும் முதல் வாடிக்கையாளர் வழங்கும் பணத்தை அப்படியே உண்டியலில் சேகரித்து ஒவ்வொரு ஆண்டும் முனியாண்டி சுவாமி பூஜைக்கு வழங்குவதை ஐதீகமாக கடைப்பிடிக்கிறோம். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அந்த பணத்தை எடுக்க மாட்டோம். மேலும் ஹோட்டலில் சுத்தமான ஆட்டிறைச்சியைத் தவிர வேறு எதையும் கலப்படம் செய்து, தொழிலுக்கு துரோகம் செய்ய மாட்டோம்.

இந்த கட்டுப்பாட்டுடன் ஹோட்டல்களை நடத்துவதால் தான் எங்களை நம்பி அதிக வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

பசியோடு வருபவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு உணவு வழங்குவது பாவம் என்றும், இதை போக்கிக்கொள்ள வாடிக்கையாளர் பணத்திலிருந்தே முனியாண்டிக்கு பிரியாணி படைத்து வழிபடுவதாகவும் சிலர் கருதுகின்றனர். முனியாண்டி சுவாமியின் தாய் கிராமம் வடக்கம்பட்டி. இங்கிருந்து மண் எடுத்துச் சென்று அச்சம்பட்டி, கோபாலபுரம், புதுப்பட்டி, செங்கப்படை என பல கிராமங்களிலும் இதேபோல விழா நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x