Published : 09 Feb 2019 05:07 PM
Last Updated : 09 Feb 2019 05:07 PM
தேசியக் கட்சிகளை நாங்கள் எப்படி தமிழகத்தில் வரவிடுவோம் என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவருமான தம்பிதுரை, சமீபகாலமாக பாஜகவுக்கு எதிரான கருத்துகளைப் பொதுவெளியில் தெரிவித்து வருகிறார்.
தம்பிதுரையின் கருத்துகள், அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல, என தமிழக பாஜக கூறி வருகிறது. எனினும், தம்பிதுரை தான் கூறும் கருத்துகளுக்கு எங்களிடம் விளக்கம் அளிப்பதாக, அண்மையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
சமீபத்தில், மத்திய பட்ஜெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்ற நிலையில், தம்பிதுரை மட்டும் பட்ஜெட்டை விமர்சித்தார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். காலப்போக்கில் தான் அது தெரியும்.
பாஜகவை நான் விமர்சிப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் என்ன பேசுகிறார்கள்? திராவிடக் கட்சிகளை தமிழ்நாட்டில் வரவிட மாட்டோம் என்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா? தேசியக் கட்சி என சொல்லிக்கொள்ளும் இவர்களை நாங்கள் எப்படி வரவிடுவோம்?" என தம்பிதுரை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT