Published : 11 Feb 2019 02:56 PM
Last Updated : 11 Feb 2019 02:56 PM

பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாதது ஏன்? இதிலும் தமிழகத்தை அவமதிப்பதா? - ஸ்டாலின் கேள்வி

பிரதமர் மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது வேதனைக்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவான்மியூரில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற திமுக எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றினார். அதன் விவரம்:

"பிரதமர் மோடி நேற்று திருப்பூருக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்திலும், அரசு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி அந்த நிகழ்ச்சி முடிந்ததற்குப் பிறகு தேசிய கீதம் பாடும் முறை தொடர்ந்து இருந்து வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கெனவே, மதுரைக்கு வந்தபோதும், நேற்றைக்கு திருப்பூர் வந்தபோதும் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, என்பது வேதனைக்குரிய ஒன்று.

அதேநேரத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசுகின்றார். தமிழில் சகோதர, சகோதரிகளே என்று சொல்கிறார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டி குறளைச் சொல்லி பேசுகின்றார். மக்களை ஏமாற்றுகின்ற நிலையில் இன்றைக்கு பிரதமர் மோடி இருந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சிகள் தேவையில்லை.

இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய சூழல்களை எண்ணிப்பார்த்து வரக்கூடிய தேர்தலில் ஒரு நல்ல விடிவு காலத்தை தமிழகத்திற்கும், மத்தியிலும் ஏற்படுத்தித் தருவதற்கு துணை நிற்க வேண்டும்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x