Last Updated : 01 Feb, 2019 11:17 AM

 

Published : 01 Feb 2019 11:17 AM
Last Updated : 01 Feb 2019 11:17 AM

கொல்லிமலை சூழல் சுற்றுலா!- சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சூழல் சுற்றுலா திட்டம், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் செயல்படுத்த முடியாத நிலையில்  உள்ளது. இதற்காக வாங்கப்பட்ட வாகனமும் கொல்லிமலை வனச்சரக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பு.

நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலை, மூலிகை வளம் நிறைந்த மலையாகும். இதனால், தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோயில், எட்டுக்கையம்மன் கோயில், பெரியசாமி கோயில், 160 அடி உயரத்திலிருந்து கொட்டும் ஆகாய கங்கை, மாசிலா அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள், பல நுாறு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, வாசலுார்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை என சுற்றுலாத் தலங்கள் பயணிகளை ஈர்க்கின்றன.

சுற்றுலா இடங்கள் மட்டுமின்றி, கொல்லிமலை சாலையில் வாகனத்தில் பயணிப்பது அலாதியாக இருக்கும். மலையடிவாரம் தொடங்கி உச்சிவரை 70 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன.

இவ்வளவு சிறப்பு மிகுந்த கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில், கடந்த 2015-ல் `சூழல் சுற்றுலா` என்ற திட்டத்தை நாமக்கல் மாவட்ட வனத் துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ்,  கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணி

களை அழைத்துச் செல்வதற்காக வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த வாகனத்தில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வனத் துறையினர், சுற்றுலாத் தலங்களை சுற்றிக் காண்பிப்பதுடன், கொல்லிமலையில் விளைவிக்கப்

படும் சிறு தானியங்கள் மூலம் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வழங்குதல், இரவு வேளையில் குடிலில் தங்க வைப்பது போன்றவையும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில்,  இந்த திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலைஉருவானது. இந்த திட்டத்துக்காக வழங்கப்பட்ட வாகனமும்,  கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வனச் சரக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, "தொடக்கத்தில் சூழல் சுற்றுலா திட்டத்தில், நாமக்கல்லில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், கொல்லிமலை சோளக்காட்டில் இருந்து பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக குறைந்த கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கட்டணத்தில், கொல்லிமலையில் இயற்கை சார்ந்த உணவு வழங்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், போதிய நிதி ஒதுக்கீடு இல்லை.

இதேபோல, இந்த வாகனத்தை இயக்குவதற்கு ஓட்டுநரும் இல்லை. எனவே, திட்டத்தை தொடர்ந்து  செயல்படுத்த முடியவில்லை. உரிய  நிதி ஒதுக்கீடு செய்தால் தொடர்ந்து  திட்டத்தை செயல்படுத்த முடியும். மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சொந்த வாகனங்களில் வருவதில்லை. பலர் பேருந்துகளில் வந்து,  செல்கின்றனர். இந்த சூழலில், கொல்லிமலை சூழல் சுற்றுலா திட்டத்துக்கு அரசு நிதி  ஒதுக்கீடு செய்தால், மலைக்கு

வரும் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  மற்ற கோடை வாசஸ்தலங்களில் இதுபோன்ற திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x