Last Updated : 27 Feb, 2019 07:40 AM

 

Published : 27 Feb 2019 07:40 AM
Last Updated : 27 Feb 2019 07:40 AM

ரஜினி, விஜய்யிடம் ஆதரவு கேட்க கமல்ஹாசன் முடிவு

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் சமூகத்தில் பிரபலமாக விளங்கும் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்க மக்கள் நீதி மய்யம் ஆலோசித்து வருகிறது.

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இருப்பினும், ஒருமித்த கருத்துடைய கட்சிகள் அணுகினால் கூட்டணி குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியில் விருப்ப மனு தாக்கல் 28-ம் தேதி (நாளை) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அல்லாதவர்களும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கமல் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை அணுகி ஆதரவு கேட்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் கூறியதாவது: ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் 40 ஆண்டுகால நண்பர்கள். மக்கள் நீதி மய்யம் தொடங்கியவுடன்கூட ரஜினியை நேரில் சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவை முன்னிட்டு திருநெல்வேலியில் சமீபத்தில் விழா நடத்தப்பட்டது. அதற்காகவும் முதல் நபராக ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் விஜய் சினிமா விழா ஒன்றில் பங்கேற்றபோது, கமலின் காலில் விழுந்தார். அவரது தோளை தட்டிக் கொடுத்த கமல், ‘‘இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது தம்பி’’ என்றார். கமல் மேல் உள்ள நம்பிக்கை, மரியாதை, நெருக்கம் காரணமாக கமலுக்கு அவர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

அவர்கள் மட்டுமின்றி, அரசியல் சாராமல் சமூகத்தில் பிரபலமாக இருக்கும் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து, அவர்களது ஆதரவைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x